அரசியல் சதுரங்கத்தில் யாராலும் வெல்ல முடியாத நிலையை அடைந்தவர் கலைஞர்! பூண்டி கலைவாணன் பெருமிதம்!

க.பாலகுரு,
அரசியல் சதுரங்கத்தில் யாராலும் வெல்ல முடியாத என்ற நிலையை அடைந்தவர் மண்ணின் மைந்தர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்று சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் பெருமிதமாக சொன்னார்.
திருவாரூர் மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாவட்டத்திலேயே முதல்முறையாக மாநில அளவிலான சதுரங்கப் போட்டியை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தார்.
முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மற்றும் நன்னிலம் தெற்கு ஒன்றியம் சார்பில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவிற்கு உட்பட்ட பூந்தோட்டம் பகுதியில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 450-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
நன்னிலம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் மனோகரன் மற்றும் திருவாரூர் விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் எம் என் ராஜா தலைமையில் இந்த சதுரங்கப் போட்டி நடைபெற்றது.
மாநில அளவிலான சதுரங்க போட்டியை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் காய்களை நகர்த்தி துவக்கி வைத்தார்.
ஏழு வயது உட்பட்ட ஆண்கள் பெண்கள், 9 வயதுக்குட்பட்ட ஆண்கள் பெண்கள் என மொத்தம் 11 வகையான பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெறும் 257 மாணவ மாணவிகளுக்கு பரிசு கோப்பைகள் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. மேலும் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக போட்டியை தொடங்கி வைத்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய திமுக சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் பேசும்போது,
மண்ணின் மைந்தர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஒவ்வொரு அணியின் சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தப்பட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி தற்போது விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.
மண்ணின் மைந்தர் முத்தமிழர் கலைஞரின் நூற்றாண்டு துவக்க விழாவில் முதல் போட்டியாக இந்த மாநில அளவிலான சதுரங்க போட்டி நடைபெறுவது பெருமையாக உள்ளது.
ஒட்டுமொத்த உலக அரங்கில் அரசியல் சதுரங்கத்தில் யாராலும் வெல்ல முடியாத என்ற நிலையை அடைந்தவர் மண்ணின் மைந்தர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். அரசியல் சதுரங்கத்தில் தனது கொள்கையை நிலை நிறுத்துவதற்கு என்னென்ன நகர்வுகளை மேற்கொள்ள முடியும் என்று அத்துணை நகர்வுகளையும் அரசியல் சதுரங்கத்தில் மேற்கொண்டு மிகப்பெரிய வெற்றி வீரனாக திகழ்ந்தவர் தலைவர் கலைஞர்.
தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலக அரசியலையே வெற்றி வீரனாக திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் தான் போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்று வெற்றி வீரனாக திகழ்ந்தார்.
முத்தமிழர் கலைஞரைப் போலவே இந்த போட்டியில் பங்கு கொள்ளும் மாணவ மாணவிகள் அனைவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு தாங்கள் தான் வெற்றி பெற வேண்டும் என்று முழு முயற்சியில் ஈடுபட்டு போட்டி முழுவதையும் டிரா செய்யும் வகையில் அற்புதமாக விளையாட வேண்டும் என்று கூறி வாழ்த்து தெரிவித்தார்.