கொட்டும் மழையில் ஆய்வு நடத்திய முதலமைச்சர்! தூய்மை பணியாளர்களுடன் டீ அருந்தி உற்சாகப்படுத்தினார்!!

கொட்டும் மழையில் ஆய்வு நடத்திய முதலமைச்சர்! தூய்மை பணியாளர்களுடன் டீ அருந்தி உற்சாகப்படுத்தினார்!!

ம.பா.கெஜராஜ்,

 சென்னையில் மழை வெளுத்து வாங்கும் நிலையில் முதலமைச்சர் நேரில் சென்று முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தினார்.  வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 மேலும்,தமிழகத்தின் 22 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

  இந்நிலையில் சென்னையில் பட்டாளம், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  கொட்டும் மழை உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளத் தன்னலம் கருதாமல் - நேரம் காலம் பார்க்காமல் நம் துயர்துடைக்கக் களம் காண்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள், அவர்களுடன் நானும் எப்போதும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன். என அவரது எக்ஸ் பதிவில் தெரிவித்திருக்கிறார் முதல்வர்.

 மேலும் பள்ளி, கல்லூரிக்கு இன்று விடுமுறை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு இன்று (அக்.16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாக பதிவாளர் அல்லி தெரிவித்துள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 7 மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

 இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,  இந்திய பகுதிகளில் நேற்று தென்மேற்கு பருவமழை விலகியநிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, தீவிரமடைந்துள்ளது.

 தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று  தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதற்கடுத்த 24 மணி நேரத்தில், வட தமிழகம், புதுச்சேரி, அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

   தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 18 முதல் 21-ம் தேதி வரை ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்

   இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும்.

   வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சொன்னார்.