கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு ரூ.3 உயர்த்தி அறிவித்த முதல்வர்! டிச.18-ம் தேதி முதல் அமல்!!

ம.பா.கெஜராஜ்,
ஆவின் நிறுவனத்துக்காக உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு ரூ.3 உயர்த்தி அளிக்க என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஆவின் நிறுவனம் தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், அதற்காக தினசரி சுமார் 32 லட்சம் லிட்டர் பாலை மாநிலம் முழுவதிலும் உள்ள 3.87 லட்சம் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்கிறது. மேலும் பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகளுக்குத் தேவையான கலப்புத் தீவனத்தையும், கால்நடை மருத்துவ வசதிகளையும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் வாயிலாக ஆவின் நிறுவனம் வழங்கி வருகிறது.
அப்படியிருக்க கடந்த ஆண்டு நவம்பர் 5-ம் தேதி முதல் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு, பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.35-ம் , எருமை பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44-ம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
இது போன்ற நேரத்தில், இடுபொருட்களின் விலை உயர்வு, உற்பத்திச் செலவினம் ஆகியவை அதிகரித்துள்ளதால், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை அரசால் பரிசீலிக்கப்பட்டு, இடுபொருட்களின் விலை உயர்வை ஈடு செய்திடவும், பால் உற்பத்தியை உயர்த்தி கூட்டுறவு நிறுவனமான ஆவினுக்கு வழங்கிடவும் ஒரு லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்தொகையாக வழங்கிட முதல்வர் உத்தர விட்டுள்ளார்.
இந்த உத்தரவு டிச.18-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதனால், பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.35 லிருந்து ரூ.38 ஆகவும், எருமை பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44- லிருந்து ரூ.47 ஆகவும் உயரும். இதன்மூலமாக 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என அறியப்படுகிறது.
இந்நிலையில் ஆவின் மேலாண்மை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு வெளியிட்டிருக்கிறார்.
அதில், பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து அதிக அளவில் பால் உற்பத்தி செய்து கூட்டுறவு நிறுவனமான ஆவினுக்கு பால் வழங்கி, பொருளாதார மேம்பாடு அடைவதுடன் கிராமப்புற பொருளாதாரம் உயர்ந்திட ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முகமது அலி திருப்தியற்ற பதிலை அளித்துள்ளார்., "ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த கேட்டிருந்தோம். ஆனால், ஊக்கத்தொகையை உயர்த்தி உள்ளனர். இதை வரவேற்கிறோம். அதேநேரத்தில், பால் கொள்முதல் விலையை உயர்த்தாதது ஏமாற்றம் அளிக்கிறது. பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். மாட்டு தீவனத்துக்கு 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும் ஆகிய2 கோரிக்கைகளை உடனடியாகநிறைவேற்ற வேண்டும்" என்று கோரிக்கைகளை அடுக்குகிறார்.