ஹவாலா பிசினசுக்காக ரவுடியிஸம்! பேரணாம்பட்டு வியாபாரிகள் பீதி!!

 டி.இ.முகமது,

  வேலூர் மாவட்டம், பேரனாம்பட்டு நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள விவசாய நிலங்களையும், குடிநீர் ஆதாரங்கள் மற்றும் நீர் நிலைகளையும் அப்போதிருந்த தோல் தொழிற்சாலைகளும், வஜ்ஜிரம் தொழிற்சாலைகளும் பாழ் படுத்திக் கொண்டிருந்ததை அறிவோம். அப்படியிருக்க அந்த சூழலைக் கடந்து, தற்போது அங்கு ரவுடியிஸம் தலை தூக்கியிருக்கிறது. சட்டவிரோத பணபறிமாற்றம், ஹவாலா போன்றவற்றால் பலரை கடத்தி கத்திமுனையில் மிரட்டும் சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன.

 பல காலமாக நடந்து வரும் இந்த ரவுடியிஸத்துக்கு ஏற்கனவே பேரனம்பட்டு காவல் நிலையத்தில் இருந்த சில காவல் அதிகாரிகளே காரணம் என்பது பட்டவர்தனம்.

 இந்நிலையில் தற்போது அங்கு ஒரு கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. அதுவும் 4 கோடி ரூபாய் கேட்டு மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது நதீம் அகமது என்பவர் ரூ.73 லட்சம் கடன் வாங்கியதாகவும், அதை அவர் திருப்பி தரவில்லை என்பதால் 4 கோடி ரூபாய் கேட்டு மிரட்டி ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை கடத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது.

 இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக போலிசாருக்கு தகவல் சென்றவுடன் அவர்கள் கோழி சாகிர் என்பவரைத்தான் முதலில் பிடித்தனராம்.

 அங்குள்ள காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கும் முத்துக்குமார் என்பவர் மற்ற அதிகாரிகளைக் காட்டிலும் ஸ்டிரிக்ட் என பெயர் பெற்றவர்.

   இவர் அந்த காவல் நிலையத்துக்கு வந்தவுடன், ரவுடிகளைப் பற்றின புகார்கள் மற்றும் வழக்குகளை தூசு தட்டி எடுத்துள்ளார். அப்போது கோழி சாகிர் என்பவரின் பெயர் பலமாக அடிபட்டிருக்கிறது. பல்வேறு அடிதடி மற்றும் சட்டவிரோத செயல்களில் அவர் ஈடுபடுவதாக அதே ஸ்டேஷனில் நீண்ட நாட்களாக பணியாற்றும் போலிசார் சிலர் இன்ஸ்பெக்டருக்கு சொல்லியிருக்கிறார்கள்.

  அதன் பேரில் விசாரித்த போது, அவர் மீது சில வழக்குகள் பேரனம்பட்டு ஸ்டேஷனில் உள்ள போதும், அவர் பல்வேறு குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் என தெரியவந்ததாம். அதில் பலவற்றில் உரிய புகார் யாரும் கொடுக்க முன்வருவதில்லை. பயமே அதற்கு காரணம் என அறியப்பட்டிருக்கிறது.

 இந்நிலையில் தான் மேற்படி கடத்தல் சம்பவத்தில், கோழி சாகிரும் ஈடுபட்டிருக்கிறார் என போலிசுக்கு தகவல் போனது. ஆகவே அவர்கள் கோழி சாகிரை அமுக்கி வந்து ஸ்டேஷனில் வைத்துவிட்டனர். பின்னர் புகார்தாரர் நதீம் அகமது கோழி சாகிரை புகாரில் குறிப்பிடவில்லை, விசாரணையிலும் அவரைப்பற்றி சொல்லவில்லை என்பதால், அவரை இந்த வழக்கில் சேர்க்கவில்லையாம்.

  ஆனாலும் அவர் சின்ன பசங்களை மிரட்டி பணம் பறிப்பது, கத்தி வைத்துக்கொண்டிருக்கும் போட்டோவை செல்போன் டிபியில் வெளியிட்டு மிரட்டுவது, என மிரட்டல் சம்பவங்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. அதற்கு சாட்சியாக ஏற்கனவே அவர் செய்த அராஜக செயல்கள் போலிசார் கைகளில் உள்ளனவாம். அவற்றில் மேற்படி நபர் ஒருவரை உருட்டுகட்டையால் தாக்கும் காட்சிகள் அடங்கியிருக்கின்றன. அதே போல் நியாஸ் என்பவரை வீடு புகுந்து தாக்கினார். இதனால் அங்குரத்த ரத்த களறியானது.  பின்னர் நியாஸின் தந்தைக்குகொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் அவர் இறந்து போனார். ஆனால் அது குறித்து உரிய புகார் தான் இல்லை. ஆகவே போலீசார் கையை பிசைந்தனர்.

  இந்நிலையில் நதீம் அகமது பேர்னாம்பட்டு காவல் நிலையத்தில்16.09.2023-ஆம் தேதி புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்கு பதியப்பட்டிருக்கிறது.

  புகாரின் விவரம் பின்வருமாறு,

 கடந்த 09.09.2023ம் தேதி பேர்ணாம்பட்டை சேர்ந்த வசீம் என்பவரிடம் 40 லட்சமும் அஸ்வாக் என்பவர் 33 லட்சமும், தொழிலுக்காக கடனாக வாங்கி, அந்த பணத்தை 10 நாட்களுக்குள் கொடுத்துவிடுவதாக செல்லி வாங்கினேன். ஆனால் கடந்த 13.09.2023ம் தேதி அஸ்வாக் மற்றும் அவருடன் சில நபர்கள் என் வீட்டினிடம் வந்து பணத்தை இப்போதே எடுத்து வைக்கவேண்டும் என்று என்னை மிரட்டினார்கள். நான் அதற்கு 10 நாட்கள் டைம் கேட்டேனே அதற்குள் வந்து பணத்தை கேட்டால் எப்படி என்று கேட்டதற்கு இப்போதே கொடுத்தாகவேண்டும் என்று மிரட்டினார்கள்.

 பின்பு நான் நாளை கொடுக்கிறேன் என்று சொன்னவுடன் என் வீட்டினிடம் இருந்து சென்றுவிட்டார்கள். என்னால் பணத்தை அவர்களுக்கு உடனடியாக தரமுடியாததால், திரு.வி.க நகரில் உள்ள எனது நண்பன் ரியாஸ் அகமது வீட்டில் மறைந்திருந்தேன்.

   இந்நிலையில் 15.09.2023ம் தேதி இரவு சுமார் 8.30 மணியளவில் நான் ரியாஸ்அகமது வீட்டில் இருப்பதை எப்படியோ தெரிந்துகொண்டு அஸ்வாக், ரைஸ், ரியாஸ் மற்றும் அடையாளம் தெரியாத சில நபர்கள் என்னை ரியாஸ்அகமது வீட்டிலிருந்து அவர்கள் கொண்டு வந்த இரண்டு சக்கர வாகனத்தில் என்னை கடத்திக்கொண்டு பக்காலபல்லி பெட்ரோல் பங்க் பக்கமாக அழைத்துக்கொண்டு அங்கிருந்து பேர்ணாம்பட்டு கிரீன்வேலி ஸ்கூல் பின்புறம் ரைஸ் என்பவரின் குதிரை வளர்க்கும் நிலத்தில் வைத்து வாங்கிய பணத்தை உடனடியாக கொடுக்க வேண்டும் என கேட்டார்கள்.

 நான் கொடுத்துவிடுகிறேன் என்று கூறிக்கொண்டிருக்கும்போதே அதில் ஒருவன் என்னை கடத்திய விஷயம் போலீஸூக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. போலீஸ் வந்துகொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் என்னை அங்கேயே விட்டுவிட்டு அவர்கள் அனைவரும் ஓடிவிட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

   மேற்படி புகாரின் பேரில் பதியப்பட்ட வழக்கில் ரயிஸ் அகமது என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவருடன் சேர்ந்து நதீம் அகமதுவை கடத்திய அஸ்வாக், வசீம், ரியாஸ் மற்றும் ஹாரிக் ஆகியோரை போலிசார் தேடிவருகின்றனர்.

  பேரனாம்பட்டு பகுதியைப் பொறுத்தவரை பத்து கோடி ரூபாய் என்றாலும் வட்டிக்கு கொடுக்கப்படுகிறதாம், அதற்கு ஒரு கோடிக்கு ஐம்பதாயிரம் இந்த ரவுடி கும்பலுக்கு கொடுத்துவிட வேண்டுமாம். இதனால் பணம் புரளும் தொழிலாக இதை கருதி இது போன்று கடத்தல் சம்பவங்களில் இந்த ரவுடிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பேரனாம்பட்டு வியாபாரிகள் மத்தியில் பீதி ஏற்பட்டிருக்கிறது. உயர் போலிஸ் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தலையிட்டு சம்மந்தப்பட்டவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தை பிரயோகிக்க வேண்டும் என்கிறார்கள்.