பட்டியலின மக்கள் பகுதி குடி தண்ணீரில் மலம் கலந்த விவகாரம்!குற்றவாளிகளை பிடிக்கவில்லை!

தமிழன்.ராசா,
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் இறையூர் கிராமத்தில் உள்ள வேங்கை வயல் பகுதியில் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 24 ஆம் தேதி மர்மநபர்கள் மலம் கலந்துவிட்டனர்.
இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமு கடந்த 27-ந்தேதி அந்த கிராமத்தில் ஆய்வு செய்தார். அப்போது பட்டியலினத்தை சேர்ந்த மக்களை அங்குள்ள அய்யனார் கோவிலில் வழிபட அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
பின்னர் அவர்களை கலெக்டர் கவிதா ராமு கோவிலுக்கு அழைத்து சென்று சாமி தரிசனம் செய்ய வைத்தார். அப்போது அதனை விமர்சித்து சாமியாடியவாறு சிங்கம்மாள் என்ற பெண் அவதூறாக பேசினார்.
இதே போல் அங்குள்ள டீக்கடையில் இரட்டைக்குவளை முறை பயன்பாட்டில் இருந்தை பார்த்து அந்த கிராமத்தில் தீண்டாமை வன்கொடுமை இருப்பதை கலெக்டர் உறுதி செய்தார். இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இறையூர் கிராமத்தைச் சேர்ந்த சிங்கம்மாள் மற்றும் டீக்கடை உரிமையாளர் மூக்கையா ஆகியோர் சாதிய பாகுபாடு காட்டியதாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். (குடிதண்ணீரில் மலம் கலந்தவர்களை இன்னும் கண்டுபிடிக்கவில்லை)
அவர்கள் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரினர். அதனை நீதிபதி சத்தியா தள்ளுபடி செய்தார். மேலும் சம்பந்தப்பட்ட கிராமத்தில் ஆய்வு மேற்கொள்ள 2 வக்கீல்களை கொண்ட ஆணையத்தை அமைத்து அங்கு நிலவும் சூழல் குறித்து ஆய்வு செய்து அதன் அறிக்கையை இன்றைக்குள் (6-ந் தேதி) சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் குமார் தலைமையில் நீதிபதியால் அமைக்கப்பட்ட ஆணையத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் செந்தில் குமார், சங்கீதா உள்ளிட்டோர் விசாரணையை தொடங்கினர்.
அவர்கள் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் முதலில் விசாரணை மேற்கொண்டு அந்த கிராமத்தில் சாதிய பாகுபாடு உள்ளதா என்பதை கேட்டனர்.
பின்னர் அவர்களை அழைத்துக்கொண்டு அங்குள்ள அய்யனார் கோவிலுக்கு சென்று பிற இரண்டு சமூக மக்களையும் வரவழைத்து மூன்று சமூக மக்களையும் ஒரே நேரத்தில் வழிபாடு செய்ய வைத்தனர்.
கோவில் பூசாரி மூலம் பட்டியல் இன மக்களுக்கு விபூதியும் பூச வைத்தனர். அப்போது மூன்று சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு இடையே எந்தவித பிரச்சினையும் இல்லை என்று கூறியதோடு, சுமூகமாக வாழ விரும்புவதாகவும் தெரிவித்தனர். இன்று இரண்டாவது நாளாக சம்பந்தப்பட்ட கிராமங்களில் ஆணையத்தை சேர்ந்த வக்கீல் குழுவினர் விசாரணை மேற்கொண்டு அதன் பின்பு நாளை மாலை அதன் அறிக்கையை புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை நீதிமன்ற நீதிபதியிடம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து எழுத்தாளரும், சமூக போராளியுமான துரைகுணா கூறுகையில் புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்திற்கு சென்றுருந்தேன். குடிதண்ணீரில் மலத்தை கலந்ததுக்கு பதிலாக பால்டாயிலை கலந்திருக்கலாம் நாங்கள் அனைவரும் குடித்துவிட்டு மாண்டு போய் இருப்போம் என்று அந்த மக்கள் சொல்கிறார்கள்.
இந்த மலத்தைக் குடித்தஇழிவை நாங்கள் தலைமுறை தலைமுறையாக சுமக்க போகிறோம் என்கின்றார்கள்.
குடிதண்ணீரில் மலத்தை கலந்த அத்தனை குற்றவாளிகளையும் கண்டுபிடித்து தண்டனை வழங்குவரை பிணையில் விடக்கூடாது.
தமிழ்நாடு முதலமைச்சர் இந்த மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்வதை விட இவர்கள் வாழ்வியலைமீட்டு உருவாக்கம் செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட அத்தனை குடும்ப உறுப்பினர்களுக்கும் இழப்பீடு வழங்குவதோடு இனி பாதுகாப்பான உத்தரவாதத்தையும் இந்த அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், குறிப்பாக இந்த செயலை புரிந்த குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றார்.