பன்னிரெண்டு மயில்கள் கொலை! விவசாயி கைது!

கு.அசோக்,
பன்னிரெண்டு மயில்களுக்கு விஷம் வைத்து கொலை செய்த விவசாயியை கைது செய்து வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே குரும்பட்டி பகுதியை சேர்ந்தவர் சண்முகம் என்பவர் சாவித்திரி என்பவருக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.
அதில் சண்முகம் நெற்பயிர்கள் பயிரிட்டு பராமரித்து வருகிறார்.
அங்கு தினமும் சுமார் 20 க்கு மேற்பட்ட மயில்கள் வந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது.
அதே போல் அங்கு எலிகள் அதிக அளவில் உள்ளது, அவை நெற்பயிர் சேதம் செய்வதாக கூறி எலிகளுக்கு மருந்து வைத்துள்ளார்.
அங்கு வரக்கூடிய மயில்கள் அந்த மருந்தை உண்டுள்ளது. அந்த எலி மருந்தை உட்கொண்ட சில நிமிடங்களில் மயில்கள் ஒவ்வொன்றாக விவசாய நிலத்தில் மயங்கி விழுந்துள்ளது.
இதில் ஒரு ஆண் மயில் உட்பட 12 மயில்கள் இறந்துள்ளது.
இந்த விவசாய நிலத்தின் வழியாக சென்றவர்கள் அதை கண்டு அதிர்ச்சியடைந்து வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் அறிந்த ஆலங்காயம் வனசரக அலுவலர் சோமசுந்தரம் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த மயில்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவ குழுவிடம் ஒப்படைத்தனர்.
அதன் பின்னர் சண்முகத்தை கைது செய்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழலில் ஆம்பூர் வாணியம்பாடி ஆலங்காயம் அனைத்து பகுதிகளில் வனப்பகுதியில் இருந்து விவசாய நிலங்களுக்கு இறை தேடி வரும் மயில்கள் தொடர்ந்து இறந்து வருகிறது. இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஆக மக்கள் அவைகளுக்கு இடையுறு செய்யாமல் பாதுகாக்க வேண்டும் என வன அலுவலர்கள் கேட்டுக் கொண்டனர்.