மேற்கு மண்டலத்தில் பலத்தை நிரூபிக்க ஓ.பி.எஸ். திட்டம்!! எடப்பாடி இனி புரட்சித்தமிழராம்!

மேற்கு மண்டலத்தில் பலத்தை நிரூபிக்க ஓ.பி.எஸ். திட்டம்!! எடப்பாடி இனி புரட்சித்தமிழராம்!

 டி.இ.முகமது,

 நேற்று மதுரையில் அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிச்சாமி டீம் பெரிய மாநாடை நடத்தினர். அதே நேரத்தில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மண்டபத்தில் மாலை 6 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவு  மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

   தற்போது எடப்பாடி பழனிசாமி தென் மாவட்டங்களில் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் மதுரையில் இன்று மாநாட்டை நடத்தியுள்ளார். இதேபோல், மேற்கு மண்டலத்தில் தனது பலத்தை நிரூபிக்கும் நோக்கில் அடுத்த மாநாட்டை நடத்த ஓ.பி.எஸ். திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  ஆலோசனைக் கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் பேசுகையில், செப்டம்பர் 3-ம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து துவங்க உள்ளேன். இ.பி.எஸ் பொறுப்பேற்ற பின் நடந்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வி தான்.

 நாடாளுமன்ற தேர்தலுக்கு விரைவில் நாம் தயாராக வேண்டும். உண்மையான உறுப்பினர்களை நாம் சேர்க்கப் போவது உறுதி.நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளரை கண்டிப்பாக நிறுத்த உள்ளோம் என பேசியுஇள்ளார்.

 இந்நிலையில், மதுரையில் நடந்த அ.தி.மு.க. மாநாட்டில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 'புரட்சி தமிழர்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.

  மாநாட்டில் எடப்பாடி கே.பழனிச்சாமி பேசியதாவது: தமிழகத்திலேயே மிகப்பெரிய கட்சி அ.தி.மு.க. தான். 31 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சி செய்த பெரிய கட்சி அ.தி.மு.க. தான். தொண்டன் உழைப்பால் உருவானது அ.தி.மு.க. அ.தி.மு.க.வின் தொண்டன் என்பதே பெருமைதான். அ.தி.மு.க.வை எதிர்க்க எந்தக் கட்சியாலும் முடியாது. நாட்டுக்கு நன்மை செய்யும் கட்சியாக உள்ளது.

   எந்தக் கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது. தொண்டனாக இருந்து உழைப்பால் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். அ.தி.மு.க. ஆட்சியில், புயல் வேகத்தை விட வேகமாக செயல்பட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டோம். மக்களை கட்டிக்காத்த அரசு என விவசாயிகள் பாராட்டினார்கள்.

  அ.தி.மு.க. ஆட்சியை பொற்கால ஆட்சி என மக்கள் பாராட்டினார்கள். மதுரை மண் ராசியான மண். மதுரையில் எதை தொடங்கினாலும், தொட்டது துலங்கும். இந்த மண்ணில் துவங்கியது அனைத்தும் வெற்றிதான். வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே கட்சி அ.தி.மு.க., தான். அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தான் ஏரி, குளங்கள் தூர்வாரி தண்ணீரை சேமித்தோம். தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மீத்தேன் திட்டத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் விவசாயிகளை அ.தி.மு.க. தான் காத்தது. விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்தோம்.

  தி.மு.க.வுக்கு பொய்தான் மூலதனம், கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது திமுக தான். இதனால், மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தின் அடிப்படையில், ஓட்டுகளை பெறுவதற்காக, அவர்களை ஏமாற்றி கச்சத்தீவை மீட்போம் என்ற பொய்யான செய்தியை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது, கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.

   நீட் தேர்வில் தி.மு.க. அரசு மிகப்பெரிய நாடகத்தை அரங்கேற்றுகிறது. முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்வை ரத்துசெய்ய கோரி இன்று போராட்டம் நடத்துகிறார். 2010ம் ஆண்டில் மத்திய காங்கிரஸ் ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் குலாம் நபி ஆசாத். தி.மு.க.வை சேர்ந்த காந்தி செல்வன் இணை அமைச்சராக இருந்தார். அந்த காலக்கட்டத்தில்தான் நீட் தேர்வு வந்தது. இது ஆவணம். மறைக்க முடியாது.

  இதை மறைத்து இன்று உண்ணாவிரதம் இருக்கிறார். 2021 சட்டசபை பொதுத் தேர்தலில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி போன்றோர் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், நீட் ரத்து செய்வதற்கு முதல் கையெழுத்து போடப்படும் என கூறினர். ஆட்சிக்கு வந்து 2 ஆண்டாகியும் நீட் தேர்வு ரத்துக்கு என்ன முயற்சி எடுத்தீர்கள். இதற்கு பதில் சொல்லுங்கள். மாணவர்களை ஏமாற்றாதீர்கள்.

  நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க. அதை தடுக்க போராடுவது அ.தி.மு.க. இவர்களாக கொண்டு வந்துவிட்டு அதை ரத்து செய்வதற்கு நாடகம் ஆடுகிறார்கள். தி.மு.க. அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் வேறு வழியில்லாமல் நாடகமாடுகின்றனர் என தெரிவித்தார்.