என் கண்ணே உன்னை நம்பிதானே இருந்தோம் டிஐஜியின் தாய் ராஜாத்தி கதறல்! உடலை சுமந்து சென்ற டிஜிபி சங்கர் ஜிவால்!!

ம.பா.கெஜராஜ்
இன்று காலை கோவையில் தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமார் உடல் உறவினர்கள் அஞ்சலி செலுத்த சொந்த ஊரான தேனி மாவட்டம் ரத்தனா நகருக்கு கொண்டு வரப்பட்டது. விஜயகுமாரின் உடலைப்பார்த்து கதறிய தாயாருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் ஆறுதல் சொன்னதுடன் டிஜஜியின் உடலை சுமந்து சென்றார்.
அரசியல் பிரமுகர்கள் , காவல்துறை உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்திய பின்னர் காவல்துறை மரியாதையுடன் விஜயகுமாரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
கோவை சரக டிஐஜியாக கடந்த ஜனவரி மாதம் முதல் பணியாற்றி வந்த விஜயகுமார், இன்று அதிகாலை தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். டிஐஜி தற்கொலை குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். டி.ஐ.ஜி.யின் இந்த தற்கொலைக்கு குடும்ப பிரச்சனை காரணமாக இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தனது பாதுகாவலரான ரவி என்பவரின் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் போலீசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட விஜயகுமார் போடிநாயக்கனூர் அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.
அவருக்கு, கீதா வாணி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இதனிடையே கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், டிஐஜி விஜயகுமாரின் உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது.
அப்போது டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.டி.ஜி.பி முன் விஜயகுமாரின் குடும்பத்தினர் கதறி அழுதனர். அப்போது என் கண்ணே உன்னை நம்பிதானே இருந்தோம் என அவரது தாய் ராஜாத்தி கதறி அழுதது அனைவரையும் கலங்க வைத்தது.
டிஜிபி சங்கர் ஜிவாலுடன், கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் மற்றும் தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் ஆகியோரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதோடு, மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட மாவட்ட எஸ்.பி க்களும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அப்போது ஐபிஎஸ் அதிகாரி துரை கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணக்குமார் ஆகியோரும் டிஐஜி விஜயகுமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். இவர்களை தொடர்ந்து தேனியில் பள்ளி பருவத்தில் விஜயகுமாருடன் படித்த 20 க்கும் மேற்பட்ட அவரது பள்ளி நண்பர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் விஜயகுமாரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில் விஜயகுமாருக்கு மரணத்திற்கு விசாரணை தேவை என்று தெரிவித்துள்ளார். எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
பள்ளியில் அவருக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்த விஜயகுமாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. பின்னர் டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் டிஐஜி விஜயகுமாரின் உடலை சுமந்து சென்றனர். விஜயகுமாரின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காவல்துறை மரியாதைக்கு பின்னர் தேனியின் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
டிஐஜி விஜயகுமாரின் மனைவி கீதா வாணி மருத்துவராக உள்ளார். மகள் பிளஸ் 2 முடித்துவிட்டு சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் உயர்கல்வி படிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கான காரணம் குறித்து கோவை அரசு மருத்துவமனையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் டிஐஜி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.