"தமிழ்நாடு நாள் விழா" கொண்டாடுதல்:- திருப்பத்தூர் ஆட்சியரின் பரபரப்பான ஏற்பாடுகள்!

  "தமிழ்நாடு நாள் விழா" கொண்டாடுதல்:- திருப்பத்தூர் ஆட்சியரின் பரபரப்பான ஏற்பாடுகள்!

ஆர்.ரமேஷ்,

    “தமிழ்நாடு நாள் விழா” கொண்டாடுதல் - தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட அளவில் பள்ளி மாணாக்கர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடைபெறுதல் - தொடர்பாக கீழ்கண்ட செய்தியை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன்,இ,ஆ,ப., அவர்கள் சார்பில் வெளியிட்டுள்ளார்.

    தனித்துவ தமிழ்நாடு என பெயர் சூட்டப்பெற்ற 18.07.1967ஆம் நாளினை பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் சூலை 18ஆம் நாள் தமிழ்நாடு நாளாக சிறப்பாக கொண்டாடப்பெறும் என்று  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பெற்றது. அவ்வறிவிப்பினை செயற்படுத்துதல் தொடர்பில் அதன் ஒரு பகுதியாக தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில்  அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணாக்கர்களுக்கு மாவட்ட அளவில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பெற வேண்டுமென்று அரசு அறிவித்துள்ளது. 

   அவ்வறிவிப்பிற்கிணங்க திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பளிளிகளிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணாக்கர்களுக்களுக்கு இடையேயான மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் வருகின்ற 12.07.2023 புதன்கிழமையன்று முற்பகல் 9.30 மணியளவில் திருப்பத்தூர், தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளி வளாகக் கூட்டஅரங்கில் தனித்தனியே நடத்தப்பெறவுள்ளன.

             மாவட்ட அளவில் நடத்தப்பெறும் இப்போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெறும் பள்ளி மாணாக்கர்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ.10000/-, இரண்டாம் பரிசாக ரூ.7000/-, மூன்றாம் பரிசாக ரூ.5000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பெற உள்ளன.  

 மாவட்டத்தில் செயற்பட்டு வரும் அனைத்துப் பள்ளிகளில் (அரசுப்பள்ளிகள்/அரசுநிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் பதின்மப் பள்ளிகள்) 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணாக்கர்கள் மட்டுமே இப்போட்டிகளில் பங்கேற்க முடியும்.

 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் முதற்கண் கீழ்நிலை அளவில் இப்போட்டிகள் நடத்தப்பெற்று கட்டுரை, பேச்சுப்போட்டிக்கு தனித்தனியே 60 மாணாக்கர்கள் வீதம்தெரிவு செய்யப்பெறுவார்கள்.முதன்மைக் கல்வி அலுவலரால் பரிந்துரைக்கப்படும் பட்டியலில் இடம் பெறும் மாணாக்கர்கள் மட்டுமே  மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் பங்கேற்க முடியும். 

  மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க பரிந்துரைக்கப்பெறும் மாணாக்கர்கள் உரிய படிவத்தை நிறைவு செய்து அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்களிடம் ஒப்பம் பெற்று போட்டி நடக்கும் நாளன்று திருப்பத்தூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் நேரில் அளித்து போட்டிகளில் பங்கேற்கலாம்.

 போட்டிகளில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பப்படிவம், போட்டிகளுக்கான தலைப்புகள் மற்றும் விதிமுறைகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பப்பெற்றுள்ளன.

போட்டிகளுக்கான தலைப்புகள்

கட்டுரை - தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழறிஞர் கலைஞரின் சுவடுகள்

பேச்சு   - தமிழ்த்திரை உலகத்தைப் புரட்டிப்போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் எழுதுகோல்

கீழ்நிலை அளவிலான போட்டிகளில் பங்கேற்பது தொடர்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்களை மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம்.  மேலும் விவரங்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் தொலைபேசி (எண் 0416 2256166) வாயிலாகவோ நேரிலோ அணுகலாம்.  இப்போட்டிகளில் பங்கேற்று பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்,இ,ஆ,ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.