ஷாருக்கான் மகன் மீதான போதை பொருள் வழக்கு: 25 கோடி பேரம்! அரசியல் பக்கம் திசை திரும்புகிறது!

ஷாருக்கான் மகன் மீதான போதை பொருள் வழக்கு: 25 கோடி பேரம்! அரசியல் பக்கம் திசை திரும்புகிறது!

  ம.பா.கெஜராஜ்,

 இந்திபட கதாநாயகனான ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் கடந்த இரண்டாம் தேதியன்று போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலிசாரால் கைது செய்யப்பட்டார்.

  பாலிவுட் கதாநாயகரின் மகன் கைது என்பதால் இது பெரிய அளவில் செய்தியானது. இதை விட வேறு பல பெரிய சம்பவங்கள் இருந்த போதிலும் ஷாருக்கான் மகன் விவகாரம் பூதாகரமாக்கப்பட்டு வருகிறது.

 அவரை ஜாமினில் வெளியே எடுக்க முயன்றும் அது நடக்காமல் போனது. போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலிசார் அப்ஜெக்ஷன் தெரிவிப்பதால் நீதிமன்றம் அதற்கு செவிசாய்த்து வருகிறது. இதனால் ஜாமின் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 இதனால் சுமார் 20 நாட்களுக்கு மேலாக மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஆர்யன் கான். இடையே ஷாருக்கான் சிறைக்கு சென்று மகனை சந்தித்து பேசிவிட்டு வீடு திரும்பினார்.

 அவரது பின்னாடியே வந்த போதை தடுப்பு போலிசார் அவரது வீட்டுக்குள் நுழைந்தனர். கூடவே மீடியாக்களை அழைத்து வந்து போலிசார் விவகாரத்தை பிரபகன்டாபடுத்தினர்.

 இதற்கு அரசியல் காரணங்கள் சொல்லப்பட்டு வந்த நிலையில், பிரச்சனைக்கு காரணம் என வேறு திசையை நோக்கி கை நீள்கிறது. 

  இந்த வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிப்பதற்கு போதைப்பொருள் அதிகாரிகள் ரூ.25 கோடி பேரம் பேசியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

 பிரபாகர் சாயில் என்பவர் இந்த வழக்கின் பொது சாட்சியாக உள்ளார். அவர்தான் இக்குற்றச்சாட்டை கூறியுள்ளார். இவர் இந்த வழக்கின் மற்றொரு சாட்சியான கோசாவி என்பவரின் மெய்க்காவலர் ஆவார்.

 கப்பலில் சோதனை நடந்த போது இருவரும் அங்கே இருந்துள்ளனர். பின்னர் கோசாவி, டிசோசா என்பவரை சந்தித்து உள்ளார்.

 இந்த சம்பவம் தொடர்பாக கோசாவி, டிசோசாவிடம் போனில் பேசும்போது, ஆர்யன் கானை விடுவிப்பதற்கு ஷாருக்கான் தரப்பிடம் ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், இறுதியில் ரூ.18 கோடிக்கு பேரம் முடிந்ததாகவும், டிசோசாவிடம் கோசாவி கூறியதை தான் கேட்டதாக சாயில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

  இந்த பேரத்தில், ரூ.8 கோடி போதைப்பொருள் தடுப்பு பிரிவின் தலைமை அதிகாரியான சமீர் வான்கடேவுக்கு கொடுக்கப்படும் என பேசிக் கொண்டதாகவும் சாயில் கூறியுள்ளார். இவரது தலைமையிலான குழுவினர்தான் இந்த சோதனையை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

  மேற்படி சமீர் வான்கடே மீது மராட்டிய மந்திரி நவாப் மாலிக் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். சொகுசு கப்பலில் நடத்தப்பட்டது போலி சோதனை என அவர் ஏற்கனவே கூறியிருந்தார்.

 இந்த குற்றச்சாட்டை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மறுத்து உள்ளனர். குறிப்பாக சமீர் வான்கடே தரப்பில் கடுமையாக மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் இருப்பதால் இது குறித்து தனக்கு தெரிந்த விவரங்களை சாயில் கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குனர் முத்தா அசோக் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

 இதற்கிடையே ஆர்யன் கானை விடுவிப்பதற்கு ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை மாநில அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என மாநில காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

 இது தொடர்பாக உயர்மட்ட குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் கூறியுள்ளார்.

 ஆனால் வழக்கை திசைத்திருப்பி நீர்த்துபோக செய்யவே இந்தமாதிரியான தகவலை பரப்பி வருவதாகவும் கூறப்படுகிறது.