கண் கலங்கி பேச முடியாமல் திணறிய மோடி! என்டிஏ கூட்டணிக்கு கிடைக்கும் ஆதரவைப் பார்த்து திமுகவின் தூக்கம் தொலைந்துவிட்டது! சேலம் பிரச்சார கூட்டத்தில் பேச்சு!  

கண் கலங்கி பேச முடியாமல் திணறிய மோடி! என்டிஏ கூட்டணிக்கு கிடைக்கும் ஆதரவைப் பார்த்து திமுகவின் தூக்கம் தொலைந்துவிட்டது! சேலம் பிரச்சார கூட்டத்தில் பேச்சு!  

ம.பா.கெஜராஜ்,

 சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

 அப்போது அவர் பேசியதாவது:- இதற்கு முன்பாக நான் பலமுறை தமிழகம் வந்திருக்கிறேன். சேலம் வருவதன் மூலம் மீண்டும் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் தற்போது பாஜகவுக்கும், எனக்கும் கிடைத்து வரும் மிகப் பெரிய மக்கள் ஆதரவை, இந்திய நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் இது குறித்துதான் பேசப்படுகிறது.

 மோடி ஆகிய எனக்கும் பாஜகவுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் கிடைக்கும் ஆதரவைப் பார்த்து, திமுகவின் தூக்கமே தொலைந்துப் போய்விட்டது.

 தமிழக மக்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டனர். இம்முறை ஏப்ரல் 19-ம் தேதியன்று விழுகிற ஒவ்வொரு வாக்கும், பாஜகவுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் என்று மக்கள் உறுதியாக முடிவு செய்துவிட்டார்கள். தமிழகத்தின் இந்த உறுதியான முடிவால், மீண்டும் மீண்டும் மோடி வேண்டும் என்று முடிவு செய்திருப்பதால், நம் வெற்றியின் எண்ணிக்கை, 400-ஐ தாண்டும்.

 வளர்ச்சியடைந்த இந்தியா, வளர்ச்சியடைந்த தமிழகம், நவீன உள் கட்டமைப்புகளுக்கு வெற்றி எண்ணிக்கை 400-ஐ தாண்ட வேண்டும். மூன்றாவது பெரிய பொருளாதாரத்தை உருவாக்க, பாரதம் தன்னிறைவுப் பெற, விவசாயிகள் பயனடைய, மீனவர் பாதுகாப்புக்கு 400-ஐ தாண்ட வேண்டும். இம்முறை மீண்டும் 400 வேண்டும்.

 நம்முடைய என்டிஏ கூட்டணி இப்போது மிக வலுவான கூட்டணியாக உருவாகி உள்ளது. என்டிஏ கூட்டணியில் பாமக இணைய சம்மதம் தெரிவித்துள்ளனர். பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸின் அனுபவம், அன்புமணி ராமதாஸின் டேலன்ட் மற்றும் அவர்களுடைய தொலைநோக்கைக் கொண்டு தமிழகத்தை இன்னும் மிகப் பெரிய உயரத்துக்கு கொண்டு செல்வதற்கான ஓர் உத்வேகம் கிடைத்திருக்கிறது.

 என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ள பாமக தலைவர்கள் மற்றும் தொண்டர்களை நான் வரவேற்கிறேன்.

 கண்கலங்கி பேச முடியாமல் நின்ற மோடி

நான் பலமுறை சேலத்துக்கு வந்திருக்கிறேன். இம்முறை நான் சேலத்துக்கு வரும்போது எனக்கு என்னுடைய பழைய நினைவுகள் எல்லாம் திரும்ப வருகிறது. 40-50 வருடங்களுக்கு முன்பு நான் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்குச் சென்ற போது, என்னுடன் ஒரு பெரிய குழு வந்திருந்தனர். அதில் ஓர் இளைஞர் இருந்தார். அவர் இந்த ஊரைச் சேர்ந்த ரத்னவேல். எனக்கு இப்போது அவருடைய ஞாபகம் வருகிறது. அவர் என்னுடன் பயணித்தபோது, சேலத்தின் பெருமைகள் மற்றும் இவ்வூரின் மற்ற சிறப்புகளை என்னிடம் கூறிக்கொண்டே வந்தார்.

 அதைக் கேட்ட பின்னர், சேலத்தின் மீது எனக்கு ஒரு மிகப் பெரிய ஈர்ப்பு உருவானது. அவர் இங்கு உணவகம் நடத்தி வந்தார். துரதிர்ஷ்டவசமாக அவர் தற்போது நம்முடன் இல்லை. ஒரு விபத்தில் அவர் இறந்துவிட்டார். சேலம் மண்ணில் கால் வைத்தவுடன் எனக்கு அவருடைய நினைவு வந்துகொண்டே இருக்கிறது.

 இந்த நேரத்தில் நான் கே.என்.லட்சுமணனை நினைவுகூர்கிறேன். தமிழகத்தில் பாஜக காலூன்ற தொடக்கக் காலத்தில் பாடுபட்ட மிக முக்கியமான மனிதர். பல தடைகளை மீறி கட்சியை வளர்த்தவர். பல பள்ளிகளை நடத்தியவர். இதேபோல், சேலம் ஆடிட்டர் ரமேஷின் நினைவுகள் வருகின்றன. அப்போது மோடி கண்கலங்கினார். சற்று நேரம் அவரால் பேசமுடியவில்லை. இரண்டு தடவை தண்ணீர் குடிதுவிட்டு பின்னர் பேசினார். தொடர்ந்து ஆடிட்டர் ரமேஷிக்காக மொளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

 தொடர்ந்து அவர் பேசுகையில், கட்சிக்காக தனது உயிரையே தியாகம் செய்து உழைத்த அந்த மாபெரும் மனிதரை நினைவுகூர்கிறேன். ரமேஷ் உயிரைக் கொடுத்து உழைத்தவர். கட்சிக்காக உழைத்தவரை சமூக விரோதிகள் கொலை செய்துவிட்டார்கள். அந்த நேர்மையாளரை இந்த மண்ணிலே நினைவுகூர்ந்து எனது இதயபூர்வமான அஞ்சலியை செலுத்துகிறேன்.

இந்து மதத்தை தாக்கும் இந்தியா கூட்டணி பிற மதங்களைத் தாக்கி பேசுவது இல்லை.

நாடு முழுவதும் தற்போது தேர்தல் பிரச்சாரம் வேகமாக தொடங்கிவிட்டது. ஆனால், தொடக்கத்திலேயே இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் திமுகவின் எண்ணம் என்னவென்பது தெளிவாக தெரிந்துவிட்டது. மும்பையில் சிவாஜி பார்க்கில் நடந்த அவர்களது முதல் பேரணியிலேயே சுயரூபம் தெரிந்துவிட்டது.

 இந்து மதத்தில் சக்தி என்பது என்ன என்பதை, தமிழக மக்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. உங்கள் ஒவ்வொருவருக்கும் மிக நன்றாகத் தெரியும்.

 இந்து மதத்தை தாக்கும் திமுக காங்கிரஸ் இந்தியா கூட்டணி பிற மதங்களைத் தாக்கி பேசுவது இல்லை.

 வேறு எந்த மதத்துக்கு எதிராகவும் அவர்கள் ஒரு சொல்கூட பேசுவது இல்லை. எப்போதெல்லாம் இந்து மதத்தை அவமதிக்க வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் ஒரு விநாடியைக் கூட வீணடிக்காமல், இந்து மதத்தை தொடர்ந்து அவமதித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை எப்படி நம்மால் சகித்துக் கொள்ள முடியும், அனுமதிக்க முடியும்?

 ஏப்ரல் 19-ம் தேதி, தமிழகத்தில் இருந்துதான், இந்த அழிவு அவர்களுக்கு தொடங்கப்போகிறது. முதல் கட்டமாக தமிழக மக்கள்தான் வாக்களிக்கப் போகிறார்கள்.   

 நம் நாட்டில் பெண்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அந்தப் பிரச்சினைகளில் இருந்து அவர்களை நான் ஒரு பாதுகாப்பு கேடயமாக இருந்து பணி செய்து வருகிறேன்.

 எந்த பெண் சக்திக்காக நாங்கள் திட்டங்களை எல்லாம் நிறைவேற்றினோமோ அந்த பெண் சக்திதான் இன்று எனக்கே பாதுகாப்பு கவசமாக இருக்கிறது. பெண்கள்தான் பாஜகவின் பாதுகாப்புக் கவசம் போல, உள்ளனர். அடுத்த   

 பெண்களை இழிவு படுத்தும் திமுக

இந்தியா கூட்டணியில் உள்ள திமுகவும் காங்கிரஸும் பெண்களை இழிவுபடுத்துகின்றனர் என்பதற்கு தமிழகம்தான் சாட்சி. மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, அவரை திமுகவினர் எப்படியெல்லாம் இழிவுபடுத்தினார்கள் என்பதை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அதுதான் அவர்களுடைய உண்மையான முகம். அதனால்தான், அவர்கள் இன்று நாங்கள் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வரும்போது, நாடாளுமன்றத்தில் அவர்கள் அதை எதிர்க்கிறார்கள்.

   தமிழகத்தில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மலிந்துபோய் இருக்கிறது. எனவே, தமிழகத்தில் உள்ள எனது சகோதர சகோதரிகளே, வரும் ஏப்ரல் 19-ம் தேதி நீங்கள் வழங்கக்கூடிய தீர்ப்பு திமுகவுக்கு அது ஒரு பாடமாக இருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான அவர்களது மனநிலையைக் கண்டிக்கும் வகையில் நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

 திமுகவும் காங்கிரஸும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.

 திமுகவும் காங்கிரஸும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இவர்கள் இருவருமே ஊழலையும், குடும்ப ஆட்சியையும் தொடர்ந்து நடத்துபவர்கள். அதனால்தான், காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட பிறகு, 5ஜி தொழில்நுட்பமே வளர்கிறது. தமிழகத்தில் திமுக ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர். தனியாக அவர்கள் ஒரு 5ஜி-யை நடத்தி வருகின்றனர். அது என்னவென்றால், அவர்களது 5-வது தலைமுறை மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று உழைத்து வருகின்றனர்.

 தற்போது திமுக செய்து வருவது 5ஜி குடும்ப ஆட்சி மோசடி. இதற்கு முன்பு அவர்கள் செய்தது 2ஜி ஊழல் மோசடி. உலகம் முழுக்க இந்தியாவை தலைகுனியச் செய்தவர்கள் திமுகவினர். அவர்கள் செய்த ஊழலை எல்லாம் நான் பட்டியலிட்டால் இந்த ஒருநாள் போதாது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல லட்சம் கோடிகளை தமிழகத்துக்கு அனுப்புவதில் மிக ஆர்வமாக இருக்கிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு. ஆனால், இங்கு இருக்கும் திமுக அரசு அந்த பணத்தில் எல்லாம் எப்படி கொள்ளை அடிக்கலாம் என்பதிலே குறியாக இருக்கிறது.

ஜி.கே.மூப்பனார், கே.காமராஜ்.

மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனாரை நான் நினைவுகூர்கிறேன். எத்தனைப் பெரிய தலைவர். அவர் தேசிய அரசியலில் மிகப்பெரிய உயரங்களைத் தொடக் கூடியவராக இருந்தார். அவர் மட்டும் மனது வைத்திருந்தால், இந்தியாவின் பிரதமர் என்ற உயரத்தை அடைந்திருப்பார். ஆனால் இந்த காங்கிரஸ் கட்சியின் குடும்ப ஆட்சி அவரை வளரவிட்டதா? அவருக்கு எதிரான அனைத்து வேலைகளையும் செய்து அவரை வளர விடாமல் செய்ததுதான் காங்கிரஸ் கட்சியின் குணம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.