மணிப்பூர் பாரதமாதாவை கொன்றுவிட்டார்கள்! ப்ளையிங் கிஸ்கொடுக்கிறார் நாடாளுமன்றத்தில் அமளி!

மணிப்பூர் பாரதமாதாவை கொன்றுவிட்டார்கள்! ப்ளையிங்  கிஸ்கொடுக்கிறார் நாடாளுமன்றத்தில் அமளி!

  பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

  மனித உரிமைகள் மீறப்படும் மணிப்பூர் கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்கள் அவை ஆகியவற்றில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தன. மேலும் , பாராளுமன்ற விதி 267- ன் படி விரிவான விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். மேற்கண்ட கோரிக்கைகளுக்கு பாராளுமன்றத்தில் அனுமதி அளிக்கப்படாததால், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டுவந்த  நிலையில், அதனை மக்களவை சபாநாயகர் ௐ பிர்லா ஏற்றுக்கொண்டார்.

 இதன் மீதான விவாதம் கடந்த இரண்டு நாட்களாக காரசாரமாக நடந்த விவாதத்தில் ராகுல்காந்தி பா.ஜ.க. அரசை விமர்சித்து காட்டமாகப் பேசினார். மணிப்பூரில் பாரதமாதாவை கொன்றுவிட்டீர்கள் என்று கடுமையாக விமர்சித்தார்.

   நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் மேலும் அவர் பேசியதாவது:-

 கண்ணெதிரில் கொல்லப்பட்ட குழந்தை

  சில நாட்களுக்கு முன்பு நான் மணிப்பூர் சென்றேன். நமது பிரதமர் அங்கு செல்லவில்லை. இப்போதுவரை அவர் ஏன் செல்லவில்லை?. மணிப்பூர், இந்தியாவில் இருப்பதாகவே அவர் கருதவில்லை. நான் மணிப்பூர் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். ஆனால், உண்மையில் மணிப்பூரே இல்லை. அதை இரண்டாக பிளந்து விட்டீர்கள்.  நான் மணிப்பூர் சென்றபோது, நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளை சந்தித்தேன். ஒரு பெண்ணிடம், ''உங்களுக்கு என்ன நடந்தது?'' என்று கேட்டேன். அதற்கு அப்பெண், ''என் ஒரே ஆண் குழந்தையை என் கண் முன்னால் சுட்டுக்கொன்று விட்டார்கள். இரவு முழுவதும் குழந்தையின் உடலுடன் இருந்தேன். பிறகு பயந்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறினேன்'' என்று கூறினார்.

  நான் அவரிடம், ''உங்களுடன் ஏதாவது எடுத்துக்கொண்டு வந்தீர்களா?'' என்று கேட்டேன். அதற்கு அவர், உடுத்திய துணிகளையும், ஒரு புகைப்படத்தையும் மட்டுமே எடுத்து வந்ததாக கூறினார்.

  மற்றொரு பெண்ணிடமும் என்ன நடந்தது என்று கேட்டேன். அவர் உடனே மயங்கி விழுந்து விட்டார். இவை 2 உதாரணங்கள்தான்.

  பாரத மாதாவை கொலை செய்து விட்டீர்கள். 

இந்தியாவை கொன்றுவிட்டீர்கள் மணிப்பூரில், நீங்கள் இந்தியாவை கொலை செய்து விட்டீர்கள். உங்கள் கொள்கைகள், மணிப்பூரை கொலை செய்யவில்லை. மணிப்பூரில் உள்ள இந்தியாவை கொன்று விட்டது. மணிப்பூர் மக்களை கொலை செய்ததன் மூலம் பாரத மாதாவை கொலை செய்து விட்டீர்கள். நீங்கள் தேசபக்தர்கள் அல்ல, தேசவிரோதிகள். இவ்வாறு ராகுல்காந்தி பேசியபோது, பா.ஜனதா எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு குறுக்கிட்டு, ''வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாதம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு காங்கிரசே காரணம். எனவே, ராகுல்காந்தி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்று கூறினார்.

 அதனை தொடர்ந்து கனிமொழி எம்.பி உரையாற்றினார். இதற்கிடையே, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மக்களவையில் பதிலளித்தார். மேலும், மணிப்பூரில் அனைத்துப் பிரிவினரும் இணைந்து பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும் என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்தார்.

 இந்நிலையில் பெண் எம்பிக்களுக்கு ராகுல் காந்தி ப்ளையிங் கிஸ் கொடுத்தார் என்று பா.ஜ.க. எம்.பி ஸ்மிரிதிராணி உள்ளிட்டோர் சபாநாயககரிடம் முறையிட்டு பரபரப்பை கூட்டினர்.