இதுவரை கவிழ்ந்த அரசுகள் எவை? இந்த ஆட்சி தப்புமா?? சீனபோருக்காக கொண்டுவரப்பட்ட நம்பில்லையில்லா தீர்மானம் இன்று மணிப்பூருக்காக!!

ம.பா.கெஜராஜ்,
அரசுக்கெதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில், அதன் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் கடுமையான சொற்றொடர்களுடன் நடந்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி இன்று பதில் உரை வழங்குகிறார். தன் மீதும் மத்திய அரசின் மீதும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளிப்பா£ என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மக்களவையில் அறிவித்தார். குறிப்பாக ராகுல் காந்தியின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி நிச்சயம் காரமான பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், எந்த கட்சிக்கு எத்தனை எம்.பி.க்கள் உள்ளனர் என்ற விபரம் பற்றி அறிவோம், தேசிய ஜனநாயக கூட்டணியில் மொத்தமுள்ள 331 எம்.பி.க்களில் 303 பேர் பாஜகவைனர் ஆவர். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு 144 எம்.பி.க்கள் உள்ளனர். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுக்கு 70 எம்.பி.க்கள் உள்ளனர்.
எத்தனை அரசு கவிழ்ப்பு?
அப்படியிருக்க கடந்த காலங்களில் மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரபட்ட அனைத்து நம்பிக்கையில்லா தீர்மானங்களும் தோற்கடிக்கப்பட்டன அல்லது முடிவடையாமல் போனதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதே சமயம் அரசின் பலத்தை நிரூபிக்கும் நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது 3 அரசுகள் கவிழ்ந்துள்ளன.
இந்திய வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான நம்பிக்கையில்லா தீர்மானங்களை எதிர்கொண்டது பிரதமர் இந்திரா காந்தியின் அரசு. அவரது அரசுக்கு எதிராக 15 முறை நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. அவை அனைத்தும் தோல்வியடைந்தன.
16 ஆண்டுகள் 286 நாட்கள் பிரதமராக நீடித்து, இந்திய வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவரான நேரு ஒரே ஒரு முறை மட்டுமே நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டுள்ளார். 1962 போரில் சீனாவிடம் இந்தியா இழந்த கசப்பான தோல்விக்குப் பிறகு இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
எனினும் அது தோற்கடிக்கப்பட்டது. 1979-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட ஒரு நம்பிக்கையில்லா தீர்மானம் அரசின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில், தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து கொண்டிருந்த போதே அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். 1990-ல் பிரதமர் வி.பி சிங் தலைமையிலான அரசு, 1997-ல் பிரதமர் தேவகவுடாவின் அரசு மற்றும் 1999-ல் வாஜ்பாயின் அரசு ஆகிய 3 அரசுகள் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து, ஆட்சி அதிகாரத்தை இழந்தன என்பது நினைவுகூறத்தக்கதாகும்.