அடம் பிடிக்கும் மகிந்த ராஜபக்சே! பதவி விலமாட்டேன் என்று சவுண்டு!

அடம் பிடிக்கும் மகிந்த ராஜபக்சே! பதவி விலமாட்டேன் என்று சவுண்டு!

 ம.பா.கெஜராஜ், 

  மகிந்த ராஜபக்சே இல்லாத புதிய பிரதமர் ஒருவரின் கீழ் இலங்கையில் தற்போது நீடித்து வரும் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இல்லாத புதிய பிரதமர் ஒருவரின் கீழ் அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பரிசீலித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

   ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் என்ற முறையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்துப் பேசினார்.

  அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேசிய இணக்க அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து அனைத்து கட்சிகளுடன் விரைவில் பேசும் கூட்டத்துக்கு ஜனாதிபதி அழைப்பு விடுப்பார் என்று கூறினார்.

  இலங்கையில் மஹிந்த இல்லாத புதிய அமைச்சரவை கொண்ட இடைக்கால அரசு, 15 முதல் 20 அமைச்சர்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

  அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயல்படும் கட்சிகளுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று விசேட கலந்துரையாடலொன்றை நடத்தினார். ஜனாதிபதி மாளிகையில் இன்று சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

  அப்போது தேசிய இணக்க அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து யோசனை முன்மொழியப்பட்டது. அதற்கு சாதகமான நிலைப்பாட்டை ஜனாதிபதி கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர சொல்கிறார்.

  தேசிய இணக்க அரசாங்கத்துடன் இணைந்து செயல்படும் கட்சிகளின் பிரதிநிதிகள் இடம்பெற்ற தேசிய சபை அமைக்கப்பட்டு, அதன் மூலம் பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்க தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

   இது குறித்து விரிவாகப் பேசிய அவர், ''ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய எமது கட்சிகளின் இணக்கத்துடன் தேசிய இணக்க அரசாங்கம் என பெயரிட நாம் தீர்மானித்துள்ளோம்.

   ஜனாதிபதியின் தலைமைத்துவத்தில் தேசிய இணக்க அரசாங்கத்துடன் இணையும் அனைத்து கட்சி தலைவர்களுடனான தேசிய சபையொன்று உருவாக்கப்படும்.

  அந்த தேசிய சபையின் ஊடாகவே, தேசிய இணக்க அரசாங்கத்தின் பிரதமர் யார் என்பது தீர்மானிக்கப்படும். நாடு இந்த பிரச்னையிலிருந்து மீள்வதற்கும், மக்களின் நன்மதிப்பை வென்றெடுப்பதற்கும் அமைச்சு பொறுப்புக்கள் எத்தனை வேண்டும் என்பதை அந்த தேசிய சபையே தீர்மானிக்கும். அத்துடன், அமைச்சு பொறுப்புக்களை யார் யார் வகிக்க வேண்டும் என்பதும் அந்த தேசிய சபையே தீர்மானிக்கும்.

  அதேபோன்று, இராஜாங்க அமைச்சு பொறுப்புக்கள் எத்தனை வேண்டும் என்பதையும் அந்த தேசிய சபையே தீர்மானிக்கும். அந்த இராஜாங்க அமைச்சர்கள் யார் என்பதையும் அந்த தேசிய சபையே தீர்மானிக்கும். அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களுக்கான செயலாளர்களையும் அந்த தேசிய சபையே தீர்மானிக்கும். இன்றைய தினம் மிகவும் வெற்றிகரமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது" என்கிறார்.

  இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி, நாடு முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும், தாம் பதவி விலக போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபயவும் பிரதமர் மஹிந்தவும் தொடர்ச்சியாக கூறுகின்றனர். இத்தகைய சூழலில் ஒவ்வொரு கட்சிகளின் தலைவர்களையும் ஜனாதிபதி கோட்டாபய சந்தித்துப் பேசி வருவது இலங்கை அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்படுகிறது.

இதற்கிடையே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலக்குவது குறித்து எந்தவித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.