திமுக வை தம் பக்கம் இழுக்கிறதா பாஜக! ராகுல் காந்தியை ஏன் அழைக்கவில்லை? எடப்பாடி பழனிச்சாமி விமர்சனத்துக்கு ஆ.ராசா காட்டமான பதில்!

ம.பா.கெஜராஜ்,
பாஜக பக்கம் சாய்கிறதா திமுக என்று எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வியெழுப்பிய நிலையில், ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் கலந்து கொண்டது, கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவுக்கு பாஜக அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அழைத்து வந்தது என அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்கள் திமுக பாஜக பக்கம் மெல்ல சாய்கிறதோ என விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது விமர்சனத்தை முன்வைத்தார். அதற்கு காட்டமான பதில் அளித்திருக்கிறார் எம்பி ஆ.ராசா.
எடப்பாடி பழனிச்சாமி,
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நாணயம் இன்று (நேற்று) வெளியிடப்பட்டது. அந்த நாணயத்தில் இந்தியில் எழுதப்பட்டு உள்ளது. தமிழ்... தமிழ்... என்று பேசி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் வைத்த தேநீர் விருந்தை புறக்கணிக்கிறாம் என்று முதலமைச்சர் கூறினார்.
ஆனால் திடீரென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,அமைச்சர்களோடு அந்த விருந்தில் பங்கேற்று உள்ளார்.
கருணாநிதி நாணயம் வெளி யீட்டு விழாவில் பங்கேற்க வேண்டும் என்றால், கவர்னரின் தேநீர் விருந்தில் பங்கேற்க வேண்டும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.
அதன் பின்னர்தான் முதலமைச்சர் அந்த விருந்தில் கலந்து கொண்டிருக்கிறார். இதில் இருந்து தி.மு.க.வும், பா.ஜ.க. னதாவும் ரகசிய உறவு வைத்து இருப்பது தெளிவாக தெரிகிறது.
பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. இருந்தபோது எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா நாணயத்தை அ.தி.மு.க.வே வெளியிட்டது. நாங்கள் பா.ஜக.வை அழைக்கவில்லை. ஆனால் தி.மு.க., இந்தியா கூட்டணியில் இருந்துகொண்டு, விழாவுக்கு ராகுல்காந்தியை அழைக்காமல், பா.ஜ.க.வை அழைத்து நாணயத்தை வெளியிடுகிறது. இதில் இருந்தே அவர்களின் ரகசிய உறவு வெட்டவெளிச்சமாகி இருக்கிறது.
இவ்வாறு அவர் கோயம்பத்தூர் விமான நிலையத்தில் சொன்னார்.
ஆ.ராசா,
இதற்கு பதிலளிக்கும் வகையில் திமுக எம்.பி., ஆ.ராசா வெள்யிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் இந்திய ஒன்றிய அரசு 100 ரூபாய் நாணயம் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறது. இந்த விழாவுக்கு ராஜ்நாத் சிங் ஏன் வருகிறார், ராகுல்காந்தியை ஏன் எதற்கும் அழைப்பதில்லை என்று எடப்பாடி பழனிசாமி கேட்டிருக்கிறார்.
இந்தியாவில் நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது ஒன்றிய அரசுதான் என்பதால், ஒன்றிய அரசில் பாதுகாப்புத்துறை அமைச்சராக உள்ள ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு சிறப்பிப்பதில் என்ன பிரச்சினை எடப்பாடி பழனிசாமிக்கு?
கலைஞரின் உருவம் பொறித்த நாணயத்தில் இந்தி எழுத்து ஏன் இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கேட்பதால் அவருக்கு என்ன ஆச்சு என்ற கவலை மேலும் அதிகரிக்கிறது. இந்தியாவில் உள்ள நாணயங்கள் எதுவாக இருந்தாலும் அதில் ஆங்கிலமும் இந்தியும் இருப்பது வழக்கம்.
அ.திமு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நாணயம் வெளியிடப்பட்டிருப்பதையும் அதிலும் இந்தி எழுத்துகள் இருப்பதையும் கூடவா எடப்பாடி பழனிசாமி அறியவில்லை? முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள நாணயத்தில்தான் 'தமிழ் வெல்லும்' என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது. இதைக்கூட உணராமல் எடப்பாடி பழனிசாமி உளறியிருப்பதால் அவரை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது எனப் புரியவில்லை.
எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு அரசின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞருக்கு நிறுவப்பட்ட சிலையை, பா.ஜ.க தலைவராக ஒரு காலத்தில் இருந்த இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்ததை இப்போது விமர்சிக்கிற எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்ட கலைஞர் சிலையைத் திறந்து வைத்தது காங்கிரஸ் தலைவராக இருந்த அன்னை சோனியா காந்திதான் என்பதையாவது அறிவாரா?
உறவுக்கு கை கொடுப்போம்-உரிமைக்கு குரல் கொடுபபோம் என்பதே முத்தமிழறிஞர் கலைஞர் எங்களுக்கு கற்றுத் தந்திருக்கும் அரசியல் இலக்கணம். அந்த வகையில்தான் ஒன்றிய அரசின் நாணயம் வெளியீட்டு விழாவும், ஆளுநரின் தேநீர் விருந்தும் நடைபெற்றது.
தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தமிழ்நாட்டிற்குரிய நிதியை வழங்காமலும்-தமிழ்நாட்டிற்கானத் திட்டங்களை செயல்படுத்தாமலும் வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஒருமுறையாவது படித்துப் பார்க்கட்டும்.
ஆதரித்தாலும் எதிர்த்தாலும் அதில் உறுதியாக இருக்கின்ற இயக்கம் தி.மு.கழகம் என்பதை இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தி அம்மையாரே முத்தமிழறிஞர் கலைஞரின் தலைமைப் பண்பு குறித்து பாராட்டியிருக்கிறார். அதே தலைமைப் பண்பையும் பக்குவமான அணுகுமுறையையும் இன்றைய கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் நிறைந்திருக்கிறது.
அ.தி.மு.க.வைப் போல பா.ஜ.க.வுடன் கள்ளக்கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. பா.ஜ.க.வை எப்படியாவது தமிழ்நாட்டில் வளரச் செய்ய வேண்டும் என்று சொந்தக் கட்சியான அ.தி.மு.க.வையே அழித்துக்கொண்டிருக்கிறார் என்று அவரது கட்சித் தொண்டர்களே குமுறுகின்ற நிலையை மறைப்பதற்கு, தி.மு.க. மீது பழி போட்டுத் திசை திருப்ப நினைக்கும் எடப்பாடி பழனிசாமியின் நாடகத்தை பொதுமக்கள் நம்பமாட்டார்கள்.
'காந்தாரி' போலக் கதறுகிறார் எடப்பாடி பழனிசாமி. பதற்றத்தில் அவர் பேசுவதெல்லாம் பிதற்றலாக உள்ளது" என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.