சென்னையில் கொட்டும் மழை! 29 மாவட்டங்களுக்கு வாய்ப்பு!

சென்னையில் கொட்டும் மழை! 29 மாவட்டங்களுக்கு வாய்ப்பு!

ஜி.சாந்தகுமார்,

இன்று காலை முதலே கனமழை பெய்து வரும் நிலையில், 29 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், ஓரிரு இடங்களில் தரைக்காற்று 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது..

சென்னையில் கனமழை..

இந்த நிலையில் சென்னையில் நேற்று வெயில் வாட்டி வதைத்தது. கோடை காலம் போன்ற வெப்பம் நேற்று பதிவானது. ஆனால் இரவு நேரங்களில் மேகமூட்டம் உருவானது. இந்நிலையில் தான் இன்று அதிகாலை 5 மணியளவில் இருந்து சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது.

  நுங்கம்பாக்கம், கிண்டி, வேளச்சேரி, திருவான்மியூர், நங்கநல்லூர், ஆலந்தூர், மீனம்பாக்கம், அடையாறு, அசோக்நகர், வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

  தி.நகர் சுரங்கப்பாதை மூடல்..

இதனால் தி.நகரில் உள்ள துரைசாமி சுரங்கபாதையில் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதித்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

குறிப்பாக, காலை 5 மணி முதல் ராஜா அண்ணாமலைபுரத்தில் 10 செ.மீ, அடையாறு 9 செ.மீ, ஈஞ்சம்பாக்கம், பள்ளிக்கரணையில் தலா 8 செ.மீ, நுங்கம்பாக்கத்தில் 6.7 செ.மீ, நீலாங்கரை, வடபழனி, வேளச்சேரி ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீ மழை கொட்டித் தீர்த்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களின் ஓரிரு பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதே போல, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வேலூர், திருப்பத்தூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் தென்காசி மாவட்டங்களின் ஓரிரு பகுதிகள் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் பகுதிகளில் இன்று காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.