டாஸ்மாக் கடையை மாத்துங்க ஆபிசர்ஸ்!இல்லைன்னா செத்துடுவாங்க!
ஆர்.கே.பி.முரளி,
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை தாலுக்கா, விளக்கணாம்பூடி புதூர் பகுதியிலிருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் வி.ஜி.பி. என்கிற திருமண மண்டபம் உள்ளது.
இந்த திருமணம் மண்டபம் எதிரில் ஒயின் ஷாப் (டாஸ்மாக்) ஒன்று இருக்கின்றது. இங்கு சரக்கு வாங்கும் குடிமகன்கள் அங்கேயே குடித்துவிட்டு கும்மாளம் அடிக்கின்றனர். அது இல்லாமல் பார் வேறு இருக்கிறது.
மேலும் சிலர் அருகில் உள்ள வயல் வெளிகளில் அமர்ந்து சரக்கு போட்டுவிட்டு கண்ணாடி பாட்டில்களை நிலத்தில் வீசிவிட்டுச் செல்கிறார்கள்.
அதே போல் போதையில் தள்ளாடும் ஆசாமிகள் சாலையில் ஆபத்தான சூழலை உருவாக்குகிறார்கள். மேலும் சரக்கடிக்க அவ்வழியே செல்லும் பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கிறார்கள்.
அந்த திருமண மண்டபத்தில் நிகழ்ச்சிகள் நடைபெறும் காலங்களில் கலாட்டாவுக்கு சொல்லி மாளாது. அதே போல்போதை ஆசாமிகள் குடித்து கும்மாளம் அடித்து பெண்களை நக்கல் செய்து வருகிறார்கள்.
இந்த சாலையில் யூ -டர்ன் கள் மற்றும் வளைவுகள் உள்ளன. அவற்றை சரக்கு பார்டிகள் முற்றுகையிட்டு கும்மாளம் அடித்து வருவதால் அவ்வழியே வரும் கனரக வாகனங்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள், காலேஜ் வண்டிகள், பள்ளிக்கூட வண்டிகள் சர்கஸ் போல சாகசம் செய்து வண்டி ஓட்ட வேண்டியதாக இருக்கிறது.
அதே போல் இதன் அருகில் பள்ளிக்கூடம், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவை உள்ளன. இவற்றை கவனத்தில் கொண்டு டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மேற்படி டாஸ்மாக் கடையை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றினால் நலம் என்று சொல்கிறார்கள்.
உயிர்பலி ஏற்படும் அளவுக்கு விபத்து ஏற்படும் முன் மக்கள் கோரிக்கையை டாஸ்மாக் நிர்வாகம் நிறைவேற்றுமா?