திமுக பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை! வண்டலூரில் பதற்றம்!

தாம்பரம் முரளி,
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக ஒன்றிய தலைவர் ஆறாமுதன் என்பவரை மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசி தாக்கி கொலை செய்துவிட்டனர்.
இதனால் அந்தப் பகுதியில் திமுகவினர் குவிந்து வருவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.
திமுகவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் ஒன்றிய தலைவருமான ஆறாமுதனுக்கு சொந்தமான அலுவலகம் வண்டலூர் மேம்பாலத்திற்கு கீழ்ப்பகுதியில் உள்ளது.
இந்தப் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம் நாளை காலை திறக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
அதனைப் பார்வையிட ஆறாமுதன் அந்த பகுதிக்கு காரில் சென்றார்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த மர்ம நபர்கள் அவர் கார் மீது வெடிகுண்டு வீசினர்.
இதனால் பயந்து போன அவர் காரில் இருந்து இறங்கி உயிர் பயத்தில் தப்பி ஓடினார். ஆனாலும் அவரை துரத்திய அந்த மர்ம கும்பல் அவரது தலை மற்றும் கழுத்து கைப்பகுதியில் பலமாக கத்தியால் வெட்டினர்.
தகவல் அறிந்த ஓட்டேரி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த திமுக பிரமுகரை மீட்டு குரோம்பாட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியில் அவர் பலியானார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த திமுகவினர் அந்த இடத்தில் கூடி வருவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது.