பெண் காவலருக்கு கத்தி வெட்டு! எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

தாம்பரம்.முரளிதரன்
பெண் காவலர் பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த நிலையில் அவரை ஒருவர் கத்தியால் வெட்டிவிட்டு ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மேகநாதன் தப்பியோடிவிட்டார். அவரை போலிசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
திருமதி.டில்லிராணி(33) கடந்த 2011 ஆம் ஆண்டு காவல் துறையில் பணிக்கு சேர்ந்து தற்போது முதல் நிலை காவலராக பி2 விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு மேகநாதன் என்பவருடன் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி சுதர்ஷினி(07) என்ற மகளும் சந்திரசேகர்(03) என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு விவாகரத்து கேட்டு பிரிந்து வாழ்வதாக தெரியவருகிறது.
இந்நிலையில், இன்று (17.06.2024) பிற்பகல் 14.00 மணியளவில் பணி முடித்துவிட்டு சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியகாஞ்சிபுரம், சாலை தெருவில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுத்து விட்டு வெளியே வரும்போது அவரது கணவர் மேகநாதன் வழிமடக்கி கத்தியால் சரமாரியாக வெட்டியதில் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டு உடனடியாக ஆட்டோவில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு முதலுதவி அளித்து, பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் தமது எக்ஸ் பக்கத்தின் வாயிலாக கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். பெண் போலிஸ் சீறுடையில் இருக்கும் போதே வெட்டப்பட்டிருக்கிறார். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த சம்பவம் நடந்திருந்தாலும், பட்ட பகலில் நடந்த இந்த சம்பவம் சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம் என்று தெரிவித்துள்ளார்.