லோக்கல் போலிசாருக்கும் கலால் போலிசுக்கும் பனிப்போர்!கட்டுப்படுத்த முடியாத கள்ளச்சாராயம்!

ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடி அருகே மதுவிலக்கு போலிசார் நடத்திய சோதனையில் 1500 லிட்டர் கள்ள சாராய ஊறல்கள் மற்றும் மூலப்பொருட்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழக ஆந்திர எல்லைப் பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மாதகடப்பா,தேவராஜாபுரம்,கொரிபள்ளம் உள்ளிட்ட மலை பகுதிகளில் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் காய்ச்சுவது அமோகமாக நடைபெற்று வருகிறது.
கள்ளச்சாராய விற்பனை மற்றும் காய்ச்சுபவர்களை பிடிக்க முடியாமல் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் திணறி வந்தனர்.
இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் மது விலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் நந்தினி தலைமையில் மது விலக்கு போலிசார் இரண்டு நாட்களாக கள்ளசாராய ஒழிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தேவராஜபுரம் பகுதியில் கள்ள சாராயம் காய்ச்ச தயாராக வைத்திருந்த சுமார் 1500 லிட்டர் கள்ள சாராய ஊறல்களையும், கள்ள சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் அடுப்புகள் மற்றும் மூலப்பொருட்களையும் கண்டறிந்து அழித்தனர்.
மேலும் கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த நாட்றம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அக்ரஹாரம் வேடி வட்டத்தை சேர்ந்த சாராய வியாபாரி மாசிலாமணி என்பவரை கைது செய்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
தமிழக ஆந்திர எல்லைப் பகுதிகளில் போலீசார் கள்ளச் சாராய ஊறல்களை அழித்து வந்தாலும் மறுபுறம் அப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பது தொடர் செயலாகவே இருந்து வருகிறது.
லோக்கல் போலிசாருக்கும் கலால் போலிசாருக்கும் உள்ள பனிப்போரே இதற்கு காரணமாம்.