ஜம்ப் அடித்த பா.ம.க! பா.ஜ.க. மகிழ்ச்சி!

Ma.ba.Gajaraj,
வழக்கம் போலவே அங்கு இங்கு என்று பாமகவை மையப்படுத்தி பேசப்பட்டு வந்த நிலையில், பலரும் எதிர்பார்த்தபடி பா.ஜ.க.வுடன் அவர்கள் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்திட்டிருக்கிறார்கள். இதனால் பாஜகவுக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
நேற்று காலை பொழுது விடிந்தவுடன், இணைய செய்திகள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் பாமக அதிமுகவுடன் கூட்டணி காண்கிறது என்று பரபரப்பாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்தது.
அதற்கேற்றவாறு அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்னையன் இந்த தகவலை உறுதிபடுத்தியிருப்பதாக குறிப்பிட்டார்கள்.
அதற்கேற்றவாறு, விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்ட வீட்டில் மருத்துவர் இராமதாசு தலைமையில் காலை முதல் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பின்னர் மாலையில் மாவட்ட செயலாளர்களை வரவழைத்து கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டம் முடிந்த பின்னர் அதிமுகவுடனான கூட்டணி என்று பாமக அறிவிக்கும் என சாதாரண தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஊடக செய்திகள் அந்த அளவுக்கு அவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் அதெல்லாம் பரப்பிவிடப்பட்ட செய்திகள் என்று மாலையில் தெரிந்துவிட்டது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிவடைந்த பின்னர், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக பாமக சார்பில் அறிவிக்கப்பட்டது. இதில் அதிமுக வுக்கு அதிர்ச்சி ஒன்றும் இல்லை. இந்த சமாச்சாரம் தான் நடக்கப்போகிறது என அவர்களுக்கு ஏற்கனவே தெரியும்.
ஊடக தொடர்புகளைப் பயன்படுத்தி அதிமுகவுடன் கூட்டு என்கிற பொய் செய்தியை முக்கிய கட்சிதான் பரப்பியதாம்.
சரி... நேற்று கூட்டணி அறிவிப்பு வெளியான நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள மருத்துவர் இராமதாசு இல்லத்தில் நாளை (19.03.2024) இரு கட்சிகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் தைலாபுரம் இல்லத்திற்கு சென்றனர்.
அப்போது, அண்ணாமலையை டாக்டர் அன்புமணி ராமதாஸ் வரவேற்றார். பின்னர் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் சில சந்தேகங்களை அண்ணாலையிடம் எழுப்பினார். இது தொடர்பாக தனியாக பேச்சுவார்த்தை நடத்தலாம் எனத் தெரிவிக்த அண்ணாமலை, பின்னர் எல். முருகன், டாக்டர் ராமதாஸ் உடன் தனி அறையில் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் பா.ஜ.க, பாமக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பா.ஜ.கா. கூட்டணியில் பாமக-வுக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டணி அமைவதில் மருத்துவர் இராமதாசுக்கும், பா.க.வின் தலைவர் அன்புமணிக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே கூட இந்த மாதிரி கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் தான் பாமக தொடர் சறுக்ககள்களை சந்தித்து வந்தது.
இராமதாசு முடிவெடுத்த போதெல்லாம் தொடர் வெற்றிகளை குவித்து வந்த பாமக இந்த தேர்தலில் பெறப்போகும் வாக்குகளும் அதேபோன்று வெற்றியும் ரொம்பவே முக்கியம்.
சேலத்தில் பெரிய அளவிளான தேர்தல் பொதுக்கூட்டத்தை பாமக கூட்டணி இன்று நடத்துகிறது. அந்தக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துக் கொள்கிறார்.
இந்தக் கூட்டணி அமையக்கூடாது என்பதில் திராவிட கட்சிகள் எதிர்பார்த்தது. இதனால் அவர்களுக்கு சோகமே.
ஆனால் பாஜகவுக்கு மிகுந்த மகிழ்ச்சி! சரி...வாக்காளர்கள் என்ன ரிசல்ட் கொடுப்பார்கள் என்பதை பின்னர் பார்ப்போம்.