இஸ்லாமிய பட்டதாரி பெண்ணை நரபலி கொடுக்க முயற்சி! மந்திரவாதிகளிடம் தப்பியவர் டி.ஐ.ஜி.யிடம் புகார்!

ம.பா.கெஜராஜ்,
படங்கள் உ.சசிகுமார்,
23 வயதான இஸ்லாமிய பட்டதாரி பெண்ணை அவரது கணவரின் குடும்பத்தார் நரபலி கொடுக்க முயன்றதாக வேலூர் சரக டிஐஜி திரு.எம்.எஸ்.முத்துசாமி இ.கா.ப. அவர்களிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த பெண்ணின் பெயர் சாரிகா தபசும். புகாரில் அந்த பெண் தெரிவித்திருப்பதாவது:- முதுகலை பட்டதாரியான எனக்கு ஹவாமா பேகம் என்கிற அம்மாவும், அப்சர் அகமது என்கிற அண்ணன், சுமையா தபசும் என்கிற அக்கா மற்றும் பாத்திமா தபசு என்கிற தங்கையும், யாசர் அராபத் என்கிற தம்பியும் உள்ளனர்.
அம்மா பர்மிஷனோடுதான் அறைக்கு வருவார்
எனது குடும்பத்தினர் நிச்சயம் செய்த வகையில் 13/47, மவுலா தெரு, பேர்னாம்பட்டு என்கிற முகவரியில் வசிக்கும் முபசிர் அகமது, த/பெ. முகமது பாஷா, என்பவருடன் எனக்கு 31.10.2022 தேதியன்று திருமணம் நடந்தது. எனது மாமனார் மற்றும் மாமியார் கேட்டுக் கொண்டபடி எனது தந்தை எனக்கும் என் கணவருக்கும் சேர்த்து மொத்தம் 50 சவரன் தங்க நகைகளை வரதட்சனையாக கொடுத்தார். எனது கணவர் முபசிருக்கு, முசகிர் என்கிற ஒரு அண்ணனும், முபசி மற்றும் நவமான் என்கிற தம்பிகளும் உள்ளனர். என் கணவருடன் சேர்த்து சகோதரர்கள் நால்வரும் அவர்களது தந்தை முகமது பாஷா நடத்தி வந்த ஹபிதாபிரைம் டேனரி தொழிற்சாலையை நிர்வகித்து வந்தனர். என் கணவர் தெழிற்சாலைக்கு போன பின்னர் எனது மாமியார் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் என்னை செய்ய சொல்லி கட்டாயப்படுத்துவார்.
வீடு திரும்பும் எனது கணவரிடம் இது பற்றி சொன்னால் அவரது தாய்க்கு சாதகமாகவே பேசுவார், அவரது தாயிடம் இதுபற்றி எதுவும் கேட்கமாட்டார். எனக்கும் என் கணவருக்கும் அவர்கள் வீட்டில் மேல் மாடியில் அறை இருந்தது. எங்களது அறைக்கு என் கணவர் வருவதற்கு அவருடைய அம்மாவிடம் அனுமதி பெற்றுதான் வருவார். ரொம்ப நேரம் அங்கேயே இருக்காதே உடனடியா வந்துவிடு என்று என் கணவருக்கு அவருடைய அம்மா கண்டீஷன் போடுவார்.
கூடுதல் வரதட்சனை
திருமணம் நடந்த மூன்றாம் மாதம் என் மாமனார் முகமது பாஷாவும், மாமியார் ஹபிதா பேகமும் என்னை அறையிலிருந்து கீழே வரும்படி என்னை அழைத்தனர். நான் கீழே வந்த போது என் கனவரும் அவருடைய மூன்று சகோதரர்களும் அங்கு இருந்தனர். எனது மாமனாரும், மாமியாரும் என்ன்னிடம் கம்பெனியில் முன்பை போல லாபம் வரவில்லை, ஆகவே கம்பெனியை டெவலப் செய்ய இருப்பதால் பணம் தேவைப்படுகிறது, உன் கல்யாணத்துக்கு கொடுத்த வரதட்சனை போதவில்லை, உங்க வீட்டுல சொல்லி வரதட்னையாக ஐந்து லட்சம் ரூபாய் பணமும், 25 சவரன் தங்க நகையும் வாங்கிவா அதை மூலதனமாக வைத்து தொழிலை டெவலப் செய்யலாம் என்றனர்.
அதற்கு நான் என் கணவரைப் பார்த்தேன், அவர் எங்க அப்பா அம்மா கேட்பதைப்போல பணமும் நகையும் உங்க வீட்டுல சொல்லி வாங்கிக்கொடு இல்லைன்னா நீ இங்கு வாழ முடியாது என்று சொன்னார். நான் எதுவும் சொல்லாமல் மாடி அறைக்கு வந்துவிட்டேன். நடந்த விஷயங்களைப் பற்றி இரண்டு நாள் கழித்து என்னுடைய அப்பாவுக்கு சொன்னேன். அவர் உன் மாமியார் வீட்டில் கேட்ட பணம் நகைகளை எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு புரட்டி கொடுக்கிறேன், கொஞ்சம் டைம் வாங்கிக்கொள் என்று சொன்னார்.
அதை அப்படியே என் கணவர் முன்னிலையில் என் மாமனார் மாமியரிடம் சொன்னதற்கு அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. உடனடியாக பணத்தை கொடு இல்லையென்றால் நீ வாழாவெட்டியாக உங்க வீட்டுக்கு போகவேண்டியது தான் என்று சொல்லிவிட்டார்கள். அதற்கு பின்னர் எனக்கு மேலும் டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். எதற்கெடுத்தாலும் குறை சொல்லுவார்கள். அவர்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் நான் ஒரு ஆள் தான் எல்லா பணியையும் செய்யவேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள்.
அடிக்கடி பணம் நகை கேட்டு டார்ச்சர் செய்துக் கொண்டே இருந்தனர். போக போக சரியாகிவிடும் பொறுமையாக இரும்மா, குடும்பம்னா இதெல்லாம் சகஜம் என்று எனது பெற்றோரும், சகோதரரும் சொன்னதன் பேரில் ஒன்னரை ஆண்டுகளாக பொறுமையாக என் கணவருடன் குடும்பம் நடத்தினேன். பின்னர் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன் நான் என் அறையில் படுத்துக்கொண்டிருந்த போது என் கணவரும் அவரது தம்பி நவமானும் அவர்களுடன் நான்கு பேரும் வந்தனர். அவர்களை பார்க்கவே பயமாக இருந்தது.
மந்திரவாதிகள்
அந்த நான்கு பேரை காட்டிய என் கணவர் இவர்கள் உன் அறையில் தான் தங்கப்போகிறார்கள், நீ கீழே வா இங்கு கொஞ்சம் வேலையிருக்கிறது என்று சொன்னார். அதற்கு நான் ஒத்துக்கொள்ளவில்லை, நம்ம அறைக்கு வெளியாட்களை ஏன் அனுமதிக்கிறீங்க யார் அவர்கள் என்று கேட்டதற்கு, உனக்கு பேய் பிடித்திருக்கிறது, அந்த பேயை விரட்டுவதற்காக மந்திரங்கள் செய்யப்போகிறார்கள், இவர்களை கேரளாவிலிருந்து அழைத்து வந்துள்ளோம். வா கீழே என்று என்னை கட்டாயபடுத்தி இழுத்துச் சென்றார்கள்.
என் மாமனார் மாமியாரிடம் இது பற்றி கேட்ட போது உன் வீட்டுல இருந்து பணம் நகை கேட்டாலும் வாங்கிதரமாட்டேன் என்கிறாய், அதனால மந்திரவாதிகளை வைத்து ஓதுகிறோம் என்று சொன்னார்கள். கேரள மந்திரவாதிகள் மூன்று நாட்கள் என் அறையிலேயே தங்கி மந்திரங்கள் செய்தனர்.
நரபலி
அவர்கள் மாடியிலிருந்து கீழே வந்த போது நானும் என்கணவரின் குடும்பத்தினரும் அங்கு இருந்தோம். அப்போது அந்த மந்திரவாதிகள் இந்த வீட்டில் பேய்கள் நடமாடுது, துஷ்ட தேவதைகள் உள்ளன ஒரு பெண்ணை நரபலி கொடுத்தால்தான் உங்கள் எல்லா பிரச்சனைகளுக்கும் விடிவு வரும். முதலில் எந்த பெண் என்று தேர்வு செய்து அவளது முடியை வெட்டி கொடுங்கள் என்று என் கனவரிடமும் மாமானார் மாமியாரிடமும் சொன்னார்கள். பின்னர் அவர்கள் ஒரு தேங்காய் கொடுத்து அதை ஒரு சின்ன அடுப்பு மீது வைக்க சொல்லிவிட்டு மீண்டும் வருவதாக போய்விட்டனர். மந்திரவாதிகள் போன பின்னர் அவர்கள் கொடுத்த தேங்காய் தீப்பிடித்து எரிந்து வெடித்து சிதறியது. அதில் என் கையில் காயம் ஏற்பட்டது. இதனால் நான் பயந்து போனேன்.
தலைமுடியை வெட்டிவிட்டனர்
அன்று மதியம் நான் சாப்பிட்ட பின்னர் எனது கணவர் எனக்கு ஒரு குளிர்பானம் கொடுத்தார், எங்களுக்கு கல்யாணம் ஆன பின்னர் இதுவரையில் ஒரு கிளாஸ் தண்ணிர்கூட அவர் எனக்கு எடுத்து கொடுத்தது கிடையாது. சரி என்று வாங்கிக் குடித்தேன் சற்று நேரத்தில் நான் மயக்க நிலைக்கு சென்றுவிட்டேன். பின்னர் என்னால் உடனே எழுந்திருக்க முடியவில்லை, அவர் கொடுத்த குளிர்பானத்தில் ஏதோ மயக்க மருந்தை கலந்து கொடுத்திருக்கிறார். இதையெல்லாம் அவர்கள் கேரளா மந்திரவாதிகள் சொல்லிதான் செய்திருக்கிறார்கள் என்பது எனக்கு புரிந்தது. சுதாரித்து எழுந்து பார்த்த போது ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தேன், அப்புறம்தான் தெரிந்தது என் தலைமுடியை வெட்டி எடுத்துள்ளார்கள்.
ஆட்டோவில் தப்பினேன்
இனி ஒரு நிமிடம் கூட இந்த வீட்டில் இருக்கக்கூடாது என்று முடிவெடுத்த நான் என் பெற்றோரிடம் விஷயத்தை சொல்வதற்காக தலையணைக்கு அடியில் வைத்திருந்த எனது செல்போனை எடுக்க பார்த்த போது என் செல்போன் அங்கு இல்லை. என்னை வீட்டிலிருந்து வெளியில் போகவிடாமல் அடைத்துவைத்தனர். ஐந்து நாட்கள் அதே நிலை தான் இருந்தது. பின்னர் நான் அங்கிருந்து ஆட்டோவில் தப்பி வந்து என் பெற்றோரிடம் நடந்தவற்றை சொன்னேன். எனது தந்தையும் எனது அண்ணனும் என் மாமனார் மாமியாரிடமும், என் கணவரிடமும் நியாயம் கேட்டனர். நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்ட அவர்கள் பெண்ணை மீண்டும் அனுப்புங்கள் நாங்கள் பத்திரமாக பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
கேரள மந்திரவாதிகளை பிடியுங்கள்
ஆனால் எனக்கு அவர்கள் மீது நம்பிக்கை இல்லை. ஏனென்றால் அந்த மந்திரவவாதிகள் வந்த போது இந்த வீட்டில் ஒரு பெண்ணை நரபலி கொடுக்கவேண்டும், முதலில் முடியை வெட்டி எடுக்க வேண்டும் என்று பேசிக்கொண்டதை நான் கேட்டேன். ஆகவே மீண்டும் அந்த வீட்டுக்கு நான் போக மாட்டேன். இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்த நிலையில் எனக்கு மனதளவிலும், உடல் அளவிலும் பாதிப்பு ஏற்பட்டிருந்ததால் உடனடியாக புகார் அளிக்க இயலவில்லை. அய்யா அவர்கள் என் புகார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரதட்னையாக நகை பணம் கேட்டதுடன், கேரளா மந்திரவாதியை வரவழைத்து என்னை அச்சுறுத்திய என் மாமனார் முகமது பாஷா, மாமியார் ஹாபிதா பேகம், என் முடியை வெட்டி, எனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்த என் கணவர் முபசிர் மற்றும் இதற்கெல்லாம் காரணமான கேரளா மந்திரவாதிகள் ஆகியோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி அந்த புகார் மனுவில் கோரியிருந்தார்.
நடவடிக்கைக்கு உத்தரவிட்ட டிஐஜி
புகாரை பெற்றுக்கொண்ட டிஐஜி அவர்கள், உடனடியாக வழக்கு பதிந்து விசாரிக்க உத்தரவிட்டார்.
அதன் பேரில் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சியாமளா அவர்கள் விசாரணை நடத்தினார். பின்னர் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது பிணையில் வெளிவர முடியாதபடி மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது .