தமிழகத்தில் பீகாரிகள் பாதுகாப்பாக இல்லையா?முதல்வர் கண்டனம்!

தமிழகத்தில் பீகாரிகள் பாதுகாப்பாக இல்லையா?முதல்வர் கண்டனம்!

ம.பா.கெஜராஜ்,

 தமிழகத்தில் பீகாரிகள் பாதுகாப்பாக இல்லை என்று பிரதமர் பேசியிருப்பதற்கு முதல்வர் முக.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் செல்வபெருந்தகை ஆகியோர் கடும் கண்டனத்தை தெரித்திருக்கிறார்கள். அற்ப அரசியலை நிறுத்திவிட்டு நாட்டின் நலன் மீது பிரதமர் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

 பீகார்¢ சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அந்த மாநிலத்தின் முசாபர்பூர் நகரில் கடந்த 30-ம் தேதி பாஜக பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில்காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகளை பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.

 அதில் பீகார் தேர்தலையொட்டி இரு ஊழல் இளவரசர்கள் கைகோத்து உள்ளனர். ஒருவர் (ராகுல்காந்தி) நாட்டின் மிகப்பெரிய ஊழல் குடும்பத்தை சேர்ந்தவர். மற்றொருவர் (தேஜஸ்வி யாதவ்) பிஹாரின் மிகப்பெரிய ஊழல் குடும்பத்தை சேர்ந்தவர் என்று விமர்சனம் செய்தார்.

 இந்த கூட்டத்தில், திமுகவையும் அவர் கடுமையாக குற்றம்சாட்டினார். ''கர்நாடகா, தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலங்களில் பணியாற்றும் பீஹார் மக்களை காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து அவமதித்து வருகின்றனர். இதேபோல தமிழகத்தில் பணியாற்றும் பீகார் தொழிலாளர்களை, திமுக தலைவர்கள் அவமதித்து பேசி வருகின்றனர்.

 இந்த கூட்டணி ஆட்சி நடைபெறும் அனைத்து மாநிலங்களிலும் இவ்வாறு நடைபெறுகிறது'' என்று பிரதமர் மோடி பேசியிருந்தார்.

 இதற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது:

 இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே திரு.

மோடி அவர்கள் அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

 ஒடிசா - பீகார் என்று எங்கு சென்றாலும், பா.ஜ.க.,வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும் பா.ஜ.க.,வினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.