ஆரணி அதிமுகவில் எம்.எல்.ஏ. V/S மா.செ. கோஷ்டி மோதல் தொடர்கிறது! இப்படியே போனால் விளங்கிடும்!
ம.முருகன்,
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில், அதிமுகவினர் இரண்டு கோஷ்டிகளாக செயல்பட்டு அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் இப்படியே போனால் விளங்கிடும் என்று அக்கட்சி தொண்டர்கள் புலம்புகிறார்கள்.
ஆரணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமசந்திரன் உள்ளார். அதிமுக வில் ஜெயசுதா என்பவர் மாவட்ட செயலாளராக பதவியில் இருக்கிறார். இதில் ஜெயசுதா என்பவர் போளூர் பகுதியைச் சேர்ந்தவர். இதனால் ஆரணி பகுதி அதிமுகவினருக்கு செம ஈகோ ஏற்பட்டிருக்கிறது.
இது ஒருபக்கம் இருக்க, மாவட்டச் செயலாளர் ஜெயசுதா பொதுக் கூட்டம் உள்ளிட்ட கட்சி பணிகளுக்காக ஆரணிக்கு வரும் போது அவரை வரவேற்று வைக்ப்படும் ப்ளக்ஸ் பேனர்கள் நகரத்தையே கலக்கும். அப்படி வைக்கப்படும் பேனர் - போஸ்டர்களில் உள்ளூர் எம்.எல்.ஏ.வாக உள்ள முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமசந்திரனின் பெயர் இடம் பெறாமல் பார்த்துக்கொண்டு ஒரு கோஷ்டி மாவட்ட செயலாளருக்கு ஜால்ரா போட்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் இறுதியில் ஆரணி அடுத்த நேத்தபாக்கம் கிராமத்தில் அதிமுக பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதற்காக தயாரிக்கப்பட்ட நோட்டீசில் எம்.எல்.ஏவின் பெயரை போடவில்லை என்பதால், மேடையில் மாவட்ட செயலாளர் இருக்கும் போதே எம்.எல்.ஏ. நோட்டீஸை தூக்கிக் காண்பித்து இது நியாயமா என்று கேள்வியெழுப்பி பிரச்சனை செய்தார்.
மாவட்ட செயலாளர் கோஷ்டியும் மறு பக்கம் எகிறினார்கள். பின்னர் கட்சித்தலைமை அவர்கள் இருவரையும் அழைத்து சமாதானம் செய்து வைத்ததாக சொல்லப்பட்டது.
அப்படியிருக்க இன்று (மார்ச் 13) காலை ஆரணி நகரத்தில் 2வது வார்டு வி.ஏ.கே நகர் பகுதியில்
சுமார் 24-லட்சம் மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட புதிய விளையாட்டு பூங்கா துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நகரமன்ற உறுப்பினர் தேவராஜ் தலைமையில் நடைபெற்ற இதில் சிறப்பு அழைப்பாளரர்களாக, முன்னாள் அமைச்சரும் ஆரணி எம்.எல்.ஏவுமான சேவூர் ராமசந்திரன் மற்றும் மாவட்ட செயலாளர் ஜெயசுதா ஆகியோர் பங்கேற்றனர்.
அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்.எல்.ஏ சேவூர் ராமசந்திரனுக்கு, சால்வை அணிவிக்குமாறு எம்.ஜி.ஆர் மன்ற
இளைஞரணி செயலாளர் ஆனந்த்தை அழைத்தனர். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்பொழுது அதிமுக மாவட்ட செயலாளர் ஜெயசுதாவின் ஆதரவாளர் என அடையாளம் காணப்படும் மாவட்ட
எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஆனந்த் என்பவர், இந்த வார்டுக்கு என்ன செய்தீர்கள் என எம்.எல்.ஏ சேவூர்
ராமசந்திரனிடம் ஆவேசமாக கேள்வியெழுப்பினார். யாரைப்பார்த்து இப்படி கேட்கிறாய்? என்னை பரிகாசம் செய்ய நினைக்கிறாயா? ஒரு கோடி ரூபாய்க்கு பணிகள் செய்துள்ளேன். கழிவு நீர் கால்வாய் கட்டி கொடுத்திருக்கிறேன் என்று எம்.எல்.ஏ.சவுண்டு விட்டார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை மாவட்ட செயலாளர் சமாதானப்படுத்த முயன்றார்.
இதனையொடுத்து ஆரணி அருகே இரும்பேடு ஊராட்சிக்குபட்ட பழங்காமூர் பகுதியில் ரூ.24லட்சம் மதிப்பீட்டில் 60-ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை புதிய நீர் தேக்க தொட்டியை ஆரணி எம்.எல்.ஏ சேவூர் ராமசந்திரன் தொடங்கி வைத்தார்.
அப்போது ஓன்றிய செயலாளர் கஜேந்திரன் என்பவர் நிகழ்ச்சிக்கு வராத காரணத்தினால், அவர் ஏன் வரவில்லை என மாவட்ட செயலாளர் ஜெயசுதாவிடம் எம்.எல்.ஏ சேவூர் ராமசந்திரன் சற்று காரமாக கேட்டார். அதற்கு ஜெயசுதா, நான் அவரிடம் இது பற்றி கேட்டுள்ளேன் என்று சொல்லி சமாளிக்கப் பார்த்தார். அப்போதும் கோபம் தனியாத எம்.எல்.ஏ., யாரை கேட்டீங்க? அவரிடம் கேட்டீங்களா என்று சத்தம் போட்டார்.
இதனால் சற்று டென்ஷனான மாவட்ட செயலாளார், ஓன்றிய செயலாளர் மீது புகார் அளியுங்கள் என்று எம்.எல்.ஏ. விடம் சொன்னார். அப்போதும் எம்.எல்.ஏவுக்கு கோபம் அடங்கவில்லை. சத்தம் போட்டுக் கொண்டே இருந்தார். என்னிடம் புகார் கொடுங்க நான் தலைமை பார்வைக்கு கொண்டு செல்கிறேன் என்றார் மாவட்ட செயலாளர்.
இது சம்மந்தமாக ஓன்றிய செயலாளர் கஜேந்திரன் கேட்ட போது எனக்கு முறையான அழைப்பு விடுவிக்கவில்லை என்பதால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று கூறினார்.
ஆரணி அதிமுகவில், எம்.எல்.ஏ சேவூர் ராமசந்திரன் மற்றும் மாவட்ட செயலாளர் ஜெயசுதா ஆகியோரின் கோஷ்டி அரசியல் பொது நிகழ்ச்சிகளில் எதிரொலிக்கிறது. இந்நிலையில் அவர்கள் இன்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆரணி நாடாளுமன்ற தொகுதியாக உள்ள நிலையில் தேர்தல் நேரத்தில் இப்படி அதிமுகவினர் மோதிக்கொள்வதை மாற்று கட்சியினர் எள்ளி நகையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படின்னா...ஏற்கனவே அதிமுக தலைமை இவர்களிடம் பஞ்சாயத்து பேசியது என்னவானதாம்?