ஆந்திரா:- முதல்வராக பதவி ஏற்ற சந்திரபாபு! கட்டிதழுவி மோடி வாழ்த்து! பவன் கல்யாண் அமைச்சரானார்!

ஆந்திரா:- முதல்வராக பதவி ஏற்ற சந்திரபாபு! கட்டிதழுவி மோடி வாழ்த்து! பவன் கல்யாண் அமைச்சரானார்!
வி.டி.வித்யாசாகர்,
ஆந்திர மாநிலத்தில் நான்காம் முறையாக சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் மற்றும் மேலும் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இதற்கான நிகழ்ச்சி விஜயவாடா அருகே பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ஜெ.பி.நட்டா, நிதின் கட்கரி, ஓ.பன்னீர் செல்வம், நடிகர்கள் சிரஞ்சீவி, ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 164 தொகுதிகளில் இக்கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற அவை தலைவராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர், தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கக்கோரி ஆந்திர மாநில ஆளுநர் அப்துல் நசீரிடம் கூட்டணி கட்சியினர் கடிதம் வழங்கினர். சந்திரபாபு நாயுடுவை ஆட்சி அமைக்க ஆளுநர் அப்துல் நசீர் செவ்வாய் கிழமை இரவு அழைப்பு விடுத்தார்.
விஜயவாடா விமான நிலையம் அருகே கேசரபல்லி எனும் இடத்தில் சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் பதவி ஏற்பு விழா வெகு பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாகனங்கள் நிறுத்த சுமார் 60 ஏக்கர் நிலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பதவி ஏற்பு விழாவுக்கு பிரதமர் மோடி வருகை தந்தார். மேலும், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜேபி. நட்டா, நிதின் கட்கரி, ராம்மோகன் உள்ளிட்டோர் வந்திருந்தனர். நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, ராம்சரண் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கைய்ய நாயுடு, தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக முன்னாள் முதல்வர் ஒ. பன்னீர் செல்வம், ராம்கோ குரூப், ஈஸ்வரி க்ரூப் நிறுவனத்தார், ஆந்திர பாஜக தலைவர் புரந்தேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆந்திர மாநிலத்தில் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த பவன் கல்யாணுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவையில் ஜனசேனா கட்சியில் இருந்து 3 பேரும், பாஜகவில் இருந்து ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.
சந்திரபாபு நாயுடு தவிர்த்த 24 அமைச்சர்களில் 3 பேர் பெண்கள். புதிய முகங்கள் 17 பேருக்கு சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது.
பவன் கல்யாண் மந்திரியாக அறிவிக்கப்பட்டதும், அவர் மேடையிலிருந்த அனைவரிடமும் கைகுலுக்கி மகிழ்ந்தார். குறிப்பாக அவரது அண்ணன் சிரஞ்சீவி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்.
அதே போல் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்றுக் கொண்டதும் அவரை மோடி கட்டித்தழுவி தட்டிக்கொடுத்தார்.