மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி!

கு.அசோக்,
மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏலகிரி மலையில் தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஏலகிரி மலையில் தனியார் கல்லூரி வளாகத்தில் மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு சிறுதானிய உணவுகள் கண்காட்சி நடைபெற்றது. மேலும் தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகா சங்கம் சார்பில் 83 மூலிகை மாதிரிகள் காட்சி படுத்தப்பட்டது.. மூலிகைகள் குறித்து வைத்தியர் செல்வம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அஞ்சல் துறை சார்பில் மத்திய அரசின் சேமிப்பு மற்றும் காப்பீட்டு திட்டங்கள் குறித்து அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் மாதேஸ்வரன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மாவட்ட தொழில் மையம் சார்பில் சிறு குறு தொழில்கள் குறித்தும் அதற்கான மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் பாஸ்கரன் விவரித்தார்.
முன்னதாக மத்திய மக்கள் தொடர்பகத்தின் உதவி கள விளம்பர அலுவலர் ஜெய் கணேஷ் அனைவரையும் வரவேற்றார்.
சிறுதானிய ஆண்டை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை ததேயுஸ், அரசு அலுவலர்கள் ,கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர்.