அமித்ஷா 150 கலெக்டர்களுடன் போனில் பேசினாரா! ஆதாரம் இருக்கா என கேட்கும் தேர்தல் ஆணையர்!

நரேஷ்.என்,
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அளித்த பேட்டியின் போது, தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சாந்து உள்ளிட்ட உயரதிகாரிகள் உடன் இருந்தனர்.
பேட்டியின் போது ராஜிவ்குமார் கூறியதாவது:- தேர்தல் தொடங்குவதற்கு முன் மார்ச் 16ம் தேதி நாங்கள் செய்தியாளர்களைச் சந்தித்தோம். தேர்தல் முடிந்துள்ள நிலையில் மீண்டும் சந்திக்கிறோம். இடையில், தேர்தல் ஆணையத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட அறிக்கைகள் மூலம் நாங்கள் எங்கள் தரப்பு தகவல்களை பகிர்ந்து கொண்டோம்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாட்டில் உள்ள 150 கலெக்டர்களிடம் போனில் பேசினார் என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் புகார் தெரிவித்திருந்தார். மாவட்ட கலெக்டர்கள்தான் தேர்தல் அதிகாரிகளாக பணிபுரிந்து வருகின்றனர். இதனால் வாக்குப்பதிவின் போது முறைகேடு நடத்தப்பட வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டு இருந்தார்.
மாவட்ட கலெக்டர்கள் மீது (தற்போது தேர்தல் அதிகாரி) யாரேனும் ஒருவர் செல்வாக்கு செலுத்த முடியுமா?. யார் செய்தது என்று எங்களிடம் யார் என்று சொல்லுங்கள். யார் செய்தாலும் அவர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்.
வதந்தி பரப்பி ஒவ்வொருவர் மீது சந்தேகத்தை கிளப்புவது சரியானது அல்ல.
தொடர்ந்து ராஜிவ் குமார் தெரிவிக்கையில் அந்த மாதிரி நடந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் வந்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னார்.
தேர்தல் மாரத்தான் வெற்றிகரமாக முடிவடைந்திருக்கிறது 97 கோடி வாக்காளர்கள், 1.50 கோடி தேர்தல் அதிகாரிகள், 10.50 லட்சம் வாக்குச்சாவடிகள், 68,763 கண்காணிப்புக் குழுக்கள், 4 லட்சம் வாகன பயன்பாடு என பிரம்மாண்டமான முறையில் இந்த தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில், 64.20 கோடி வாக்காளர்கள் வாக்களித்திருக்கிறார்கள். இது ஒரு உலக சாதனை.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலோடு ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. 2019ல் 540 மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. இம்முறை 39 மறுவாக்குப்பதிவு மட்டுமே நடைபெற்றுள்ளது. இந்த 39-ல், 25 தொலைதூரப் பகுதிகளான அருணாச்சலப் பிரதேசத்திலும் மணிப்பூரிலும் நடந்துள்ளன. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவாக ஜம்மு காஷ்மீரில் அதிக வாக்காளர்கள் வாக்களித்துள்ளது பாராட்டுக்குரியது.
பெரிய வன்முறைச் சம்பவங்கள் எதையும் இந்த தேர்தலில் இல்லை. வன்முறைச் சம்பவங்கள் நடந்த ஒரு சில இடங்களிலும் நாங்கள் துரிதமாகச் செயல்பட்டு நிலைமையை கட்டுப்படுத்தினோம். தேர்தல் காலத்தில் கிட்டத்தட்ட ரூ.10,000 கோடியை நாங்கள் பறிமுதல் செய்துள்ளோம். 2019ல் கைப்பற்றப்பட்ட மதிப்பை விட இது கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமாகும். பணம், இலவசங்கள், மதுபானங்கள் உள்ளிட்டவற்றின் விநியோகம் இம்முறை மிகப் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டது.
இவை தொடர்பான 495 புகார்களில் 90% க்கும் அதிகமான புகார்கள் மீது தீர்வு காணப்பட்டது. தவறான தகவல்கள் பரப்பப்படுவதையும் தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்தி உள்ளது. இத்தகைய பகிர்வுகளை முன்கூட்டியே கண்டறிந்து அவற்றை சமூக ஊடகங்களில் பரவவிடாமல் தடுக்கும் பணிகளை எங்கள் நிபுணர்கள் குழு சிறப்பாக மேற்கொண்டது.
நாளை நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. துரிதமாக செயல்படுவது, வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவது, பதில்கூறும் பொறுப்பை ஏற்று செயல்படுவது என நாங்கள் செயல்பட்டுள்ளோம். அந்த வகையில் இந்திய தேர்தல் ஆணையம் நிகரற்ற நம்பகத்தன்மையைக் கொண்டுள்ளது. இவ்வளவு பெரிய தேர்தல் பணியை வெற்றிகரமாக நடத்தி முடித்திருப்பது உண்மையில் ஒரு அதிசயம். உலகில் இதற்கு இணை எதுவும் இல்லை. 23 நாடுகளைச் சேர்ந்த 75 பார்வையாளர்களைக் கொண்ட மிகப்பெரிய உலகளாவிய பிரதிநிதிகள் இந்தியாவின் தேர்தல் அற்புதத்தால் பரவசமடைந்தனர்." என்று சொன்னார்.
மேலும் காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு அவர் ஆதாரங்களை தரவேண்டும் என்றார்.