மருத்துவர்கள் - செவிலியர்கள் இல்லா ஆலங்காயம் மருத்துவமனை!

கு.அசோக்,
ஆலங்காயம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில். மருத்துவர்கள் செவிலியர்கள் இல்லாத அவல நிலை, மயக்கமடைந்து ஆஸ்பத்திரிக்கு சென்ற மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றூம் செவிலியர்கள் வராததால் நோயாளி பாதிப்புக்குள்ளான சம்பவம் குறித்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம், பெத்தூர் பகுதியை சேர்ந்தவர் எமிலி (60) இவர் உடல் நலக்குறைவால் திடீரென மயக்கமடைந்து அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்த போது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நீண்ட நேரமாக மருத்துவர்கள் செவிலியர்கள் யாரும் இல்லாததால் மூதாட்டிக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் அவரது உறவினர்கள் பதட்டம் அடைந்தனர், சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு அங்கிருந்த பொதுமக்கள் சிலர் தலைமை மருத்துவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய பின்னர் செவிலியர் ஒருவர் மட்டும் வந்து மூதாட்டிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் ஆலங்காயம் சுற்றுவட்டார பகுதிகளில் 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வரும் பொதுமக்கள் சிகிச்சை பெற இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையே பயன்படுத்தி வரும் சூழலில் இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்கு வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் செவிலியர்கள் இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் , போதுமான மருத்துவர்கள் செவிலியர்கள் இல்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.