மின்னல் வேகத்தில் கொண்டு சேர்க்கப்பட்ட மனித உறுப்புகள்!

க.பாலகுரூ

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளை சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் தானம். 50 பேர் கொண்ட மருத்துவ குழு மூலம் உடல் உறுப்புகள் பகிர்ந்தளிப்பு.

 மயிலாடுதுறையை அருகே நல்லத்துகுடி பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (35). பெட்டிக்கடை நடத்தி வந்தார், இவரது மனைவி வாசுகி. இவர்களுக்கு மாதேஷ் (9), தினேஷ் (5) என இரு மகன்கள்  உள்ளனர்.

 இந்நிலையில் அய்யப்பன் கடந்த 7-ம் தேதியன்று ஒரு சாலை விபத்தில் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் மீட்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

 பின்னர், மேல் சிகிச்சைக்காக  திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இருந்தும் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்யவும் அவர்கள் முன் வந்தனர். இதையடுத்து  மருத்துவக்குழு அமைக்கப்பட்டு உடல் உறுப்புகள் அறுவை செய்து எடுக்கப்பட்டது.

 

இதில், அவரது கண்கள் இரண்டும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. நுரையீரல் மற்றும் இதயம் ஆகியன சென்னையில் உள்ள  தனியார் (எம்.ஜி.எம்) மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

திருச்சியில் உள்ள (எஸ்ஆர்எம்) தனியார் மருத்துவமனை மற்றும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தலா ஒரு சிறுநீரகம்,  மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு (வேலம்மாள்)  கல்லீரல் தானமாக ஆம்பூலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டது.

   இதில் சென்னைக்கு செல்லும் உறுப்புகள் திருச்சி கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து இரவு விமானத்தில்

அனுப்பி வைக்கப்பட்டது. உடல் உறுப்புகள் கொண்டு செல்லப்படும் இரு ஆம்புலன்ஸ் முன்னேயும், பின்னேயும் போலீஸ் வாகனங்கள் பாதுகாப்புக்காக சென்றன.மூன்று மணிநேரத்திற்குள் விமானம் மூலம் சென்னைக்கு உடல் உறுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டது.

 இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்த கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜ்..திருவாரூர் அரசு மருத்துவமனை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மருத்துவர்களும், மயக்க மருந்துவர்களும், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், வெளி மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் 50 பேர் கொண்ட குழு நான்கு மணி நேரம் சிகிச்சை மேற்கொண்டதாக தெரிவித்தார்.