ஆக்கிரமிப்பாளர்களின் அடாவடி மறியல் !

கு.அசோக்,
வாணியம்பாடி நூருல்லா பேட்டை பகுதியில் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கால அவகாசம் கேட்டு மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட கோவிந்தாபுரம், நூருல்லாபேட்டை ஆகிய பகுதிகளில் ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பு செய்து 65 குடும்பங்கள் வீடுகளைக் கட்டி கடந்த 30 ஆண்டு காலமாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு பெய்த கன மழை காரணமாக மழை நீர் செல்ல முடியாமல் சாலைகள், அரசு மருத்துவமனை, பள்ளிகளில் புகுந்தது. இதனால் பொதுமக்களும், நோயாளிகளும், மாணவர்கள் பெரும் அவதிப்பட்டனர். பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் ஏ.வ.வேலு, சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், தேவராஜி உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டுஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனே செய்து தர உத்தரவிட்டனர்.
தொடர்ந்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றமும் உத்தரவிட்டு உள்ளது.இதன் அடிப்படையில் வருவாய்த்துறை நீர்நிலை ஆக்கிரமிப்புகளை, கால்வாய் ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக அகற்றக் கோரி சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில் இன்று காலை வட்டாட்சியர் சம்பத் தலைமையில் வருவாய் துறையினர் நூருல்லாபேட்டை பகுதியில் உள்ள ஏரி கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஜேசிபி இயந்திரம் உடன் வந்தனர். இதனை அறிந்த ஆக்கிரமிப்பாளர்கள் கால அவகாசம் கேட்டு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நகரத்திற்கு ஒட்டி உள்ள பகுதியில் வீட்டுமனைகளை கொடுத்த பின்னர் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து வட்டாட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மக்களின் போராட்டம் காரணமாக ஆக்கிரமிப்பு அகற்ற முடியாமல் வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறையினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.