550 மதிப்பெண்.... 51 மாணவச் செல்வங்கள்:- ஆட்சியர் உற்சாகமாக பாராட்டினார்!

ஜி.கே.சேகரன்,
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2023-24 கல்வி ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 550 மதிப்பெண்ணிற்கு மேல் பெற்ற 51 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, புத்தகங்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்தில் 2023-24 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் பொது தேர்வில் 138 பள்ளிகளிலிருந்து 6032 மாணவர்களும், 7503 மாணவியர்களும் தேர்வு எழுதினார்கள். இதில் 5393 மாணவர்களும், 7131 மாணவியர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 92.53 சதவிகிதமாகும். 28 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சியினை பெற்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயின்று 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 550 க்கும் அதிகமாக மதிப்பெண்களை பெற்ற 51 மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரடியாக அழைத்து அவர்களுக்கு பரிசாக புத்தகம் வழங்கி பாராட்டினார்.
மேலும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஒவ்வொரு மாணவ, மாணவிகளுடனும் தனித்தனியே கலந்துரையாடி அவர்களின் உயர்கல்வி குறித்த எதிர்கால குறிக்கோள் குறித்து கேட்டறிந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் மாணவ, மாணவிகளிடம் வருகின்ற 14.05.2024 அன்று நடைபெறவுள்ள உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலவலர் மணிமொழி, மாவட்ட கல்வி அலுவலர்கள் தயாளன், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.