இலங்கைக்கு கடத்த இருந்த 10 மூட்டை கஞ்சா பறிமுதல்!

ஜி.பாலகுரு,
முத்துப்பேட்டை அலையாத்திக்காடு வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 10 மூட்டை (300 கிலோ) கஞ்சாவை அதிகாலை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அலையாத்திக் காடு வழியாக இலங்கைக்கு கஞ்சா முட்டை கடத்த இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் திருவாரூர் க்யூ பிராஞ்ச் போலீசார் மற்றும் முத்துப்பேட்டை டி.எஸ்.பி. விவேகானந்தன் தலைமையில் போலீசார் முத்துப்பேட்டை அலையாத்தி காட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது அங்குள்ள லகூன் திட்டு பகுதியில் 3-பேர் சந்தேகத்திற்கு இடமாக நின்றதையடுத்து போலீசார் சுற்றி வளைத்தனர். அப்பொழுது அங்கு 10 மூட்டை கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மூன்று பேரும் முத்துப்பேட்டை அடுத்த காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கண்ணுச்சாமி மகன் முருகானந்தம் (43), அதே பகுதியை சேர்ந்த சௌந்தர்ராஜன் மகன் மகேந்திரன் (29), கோவிலூர் மெயின் ரோட்டை சேர்ந்த மாரிமுத்து மகன் சசிகுமார்(20) ஆகியோர் என்றும் அதிராம்பட்டினத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கஞ்சாவை இலங்கைக்கு கடத்த இருந்ததும் தெரிய வந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா சுமார் 300 கிலோ எடையும், அதன் சந்தை மதிப்பு 10 லட்சம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் முத்துப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.