அய்யய்யோ...மீண்டும் 4 நாட்களுக்கு கனமழை!

ம.பா.கெஜராஜ்,
தமிழக வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி வரும் 4 நாட்களுக்கு கன மழை பெய்யுமாம்.
சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்றும், நவம்பர் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் (ஐ.எம்.டி) தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் சுற்றுவட்டாரத்தில் குறைந்த வெப்பமண்டல மட்டங்களில் ஒரு சூறாவளி சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த 4-5 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரும் என்று (ஐ.எம்.டி) அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும். மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ஐஎம்டி கூறுகிறது.
ஏற்கனவே கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக நேற்று, இரண்டு மத்திய குழுக்கள் மாநிலத்தின் பல பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் (வடகிழக்கு பருவமழையின் போது தமிழகத்தில் 61% அதிகமாக மழை பெய்துள்ளது) நிவாரணம் தொடர்பான பல்வேறு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து குறுகிய கால நடவடிக்கைகளுக்காக 549.63 உட்பட மொத்தம் 2,629.29 கோடி வழங்க வேண்டும் என நவம்பர் 18ஆம் தேதி மத்திய அரசை தமிழ்நாடு வலியுறுத்தியது.
குறிப்பு:-தென் மேற்கு வங்க கடல் பகுதியில் இன்று(புதன்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர தொடங்கி, இலங்கைக்கும், தென் தமிழகத்துக்கும் இடையே கரையை கடக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.