தோல் கழிவுகளுக்கு தீ வைத்தது யார்!

கு.அசோக்,
இராணிப்பேட்டை மாவட்டத்தில், இராணிப்பேட்டை அருகே வெட்ட வெளியில் கொட்டப்பட்ட தோல் கழிவுகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் சுவாசக் கோளாறு ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிக அளவில் தோல் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. ஆசியாவிலேயே கறூப்பு மாவட்டமாக இப்பகுதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கும் போதிலும், சில தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் தோல் கழிவுகள் பாதுகாப்பின்றி வெட்ட வெளியில் கொட்டப்படுகிறது.
இதனால் காற்று மாசு ஏற்படுவதுடன், நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்பட்டு மக்களுக்கு சுவாசம் மற்றும் இருதய கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக குற்றச்சாட்டப்படுகிறது.
இந்நிலையில் முத்துக்கடை அடுத்த மாந்தாங்கல் பகுதியில் கழிவுகள் அனைத்தும் ஆங்காங்கே வெட்ட வெளியில் கொட்டுகின்றனர். அது ஒருபுறம் இருக்க அதை தீ வைத்து எரித்துவிடுகின்றனர்.
இதனால் அந்த பகுதியில், கருப்பு புகையுடன் கூடிய தீ பரவுகிறது.
நேற்றும் அப்படி நடந்தது. இதைக்கண்ட பொதுமக்கள் உடனடியாக இராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயினை கட்டுப்படுத்தினர். தொடர்ந்து தோல் எரித்த கழிவுகளால் வெளியேறிய கருப்பு புகையினால் சுவாசக் கோளாறு ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்து வருகின்றனர்.