லேகியம் விற்பவர்கள் அரசியல் தலைவர்கள் ஆனால் இப்படித்தான் பேசுவார்கள்!

டி.இ.முகமது,
லேகியம் விற்பவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் அரசியல் தலைவர் பதவிக்கு வந்தால் இப்படித்தான் பேசுவார்கள் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் கூறினார். வேலுமணியும் மற்றொரு எம் .எல் .ஏ.வும் பாஜகவில் இணையப்போகிறார்கள் என்று பரவிய தகவலுக்கு இவ்விதமாக அவர் பதிலளித்திருக்கிறார்.
அண்ணாமலையின் நடைபயண நிகழ்ச்சி இன்று முடிவுக்கு வருகிறது. இந்த நடையை ஏறக்கட்டும் நிகழ்ச்சிக்கு முன் தினம் கோவையில் உள்ள தனியார் ஹோட்டல் வளாகத்தில் முக்கிய தலைவர்கள் பாஜக வில் இணைய உள்ளார்கள் என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியின் போது சொன்னார். ஆனால் அந்த இணைப்பு திட்டம் கைவிடப்பட்டதாக அவர்களே அறிவித்துவிட்டனர்.
முக்கிய தலைவர்கள் என்று அண்ணாமலை குறிப்பிட்டது அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணியையும், கோவை மாநகர் மாவட்டச் செயலாளரும், கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ வான அம்மன் அர்ச்சுனனையும் தான் என்று செய்திகள் பரவின.
அதற்கேற்றவாறு இணைப்பு விழா நடக்க இருந்த ஹோட்டல் அருகேயே எம்எல்ஏ அம்மன் அர்ச்சுனன் சுற்றிக் கொண்டிருந்தாராம். ஆகவேதான் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டதாம்.
ஆனால் இதற்கு எம்எல்ஏ அம்மன் அர்ச்சுனன் வேறு மாதிரியான ரியாக்ஷன் கொடுத்தார். பா.ஜ.க.விலிருந்து தான் இரண்டு எம் .எல் .ஏக்கள் அதிமுகவில் இணைய உள்ளனர் என்று பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில், அதிமுக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம், கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அம்மன் அர்ச்சுனன் உடன் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
நாங்கள் பாஜகவில் இணையப்போவதாக வதந்திகள் கிளம்பியுள்ளன. அதிமுக தொண்டர்களின் மனஉறுதியை குலைக்கும் வகையில் இந்த வதந்திகளை பரப்பிவருகின்றனர். இது அறமற்ற அரசியல். பாஜகவுக்கும், திமுகவுக்கும் நாங்கள் சொல்லிக்கொள்வது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மூன்றாம் தலைமுறை அரசியலில் வீறு நடைபோட்டு வருகிறது.
வடக்கில் இது போல் செய்ததை போலவே இங்கும் செய்யலாம் என நினைக்க வேண்டாம். இது தமிழ்நாடு. இது அதிமுக. இங்கே இருக்கிற ஒரு கைப்பிடி மண்ணைக்கூட எவரும் எடுக்க முடியாது. அதற்கான வாய்ப்பு இல்லை. லேகியம் விற்பவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள் ஆனால் என்னவாகும் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் இது" என்று பரபரப்பாக சொன்னார்கள்.