'பாஜக-வுக்கு தனித்துப் போட்டியிடும் வலிமை உள்ளது' என்கிற கோஷம் கைவிடப்பட்டது!

ம.பா.கெஜராஜ்,
'பாஜக-வுக்கு தனித்துப் போட்டியிடும் வலிமை உள்ளது' என்கிற கோஷம் கைவிடப்பட்டதாவே அமித்ஷா உடனான அதிமுக சந்திப்பு உணர்த்துவதுடன், இ.பி.எஸ். & அண்ணாமலை கூல்படுத்தப்பட்டனர்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் யிறி நட்டா ஆகியோருடன் டெல்லியில் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு ஆலோசனை நடத்தியிருந்தார். அந்த ஆலோசனையின்போது அவருடன் பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக உறுப்பினர்கள் சிலர் இருந்தனர்.
ஆலோசனை கூட்டத்தின் இறுதியில் "அதிமுக - பாஜக கூட்டணி சிக்கல்கள் இல்லாமல் செயல்பட, தேவையற்ற கருத்துக்களை தவிர்க்க வேண்டும். வரும் மாதங்களில் தலைமை மட்டத்தில் ஆலோசனைகள் தொடரும். டி.எம்.கே. லீக்ஸ் போன்ற விவகாரங்களை மக்களிடம் கொண்டு செல்ல பாஜக மற்றும் அதிமுக தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.
அடுத்த வருட மக்களவை தேர்தல் மற்றும் அடுத்த சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை இப்போதே தொடங்க வேண்டும். இரண்டு கட்சிகளின் தலைவர்களும் பரஸ்பரம் எதிர்மறை கருத்துக்கள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும்" போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த உயர்மட்ட ஆலோசனையின் தாக்கமாக, அண்ணாமலையின் சமீபத்திய கருத்தான 'பாஜக-வுக்கு தனித்துப் போட்டியிடும் வலிமை உள்ளது' என்பதில் நிலவிவந்த சந்தேகங்கள் களையப்பட்டுள்ளது என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் முறைத்துக் கொண்டிருந்த இ.பி.எஸ். & அண்ணாமலை கூல்படுத்தப்பட்டனர்.
ஓ பன்னீர்செல்வம் விவகாரம் குறித்து முக்கிய ஆலோசனை எதுவும் நடைபெறவில்லையாம். 'நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஓபிஎஸ் சச்சரவு குறித்து தற்போது ஆலோசனை தேவை இல்லை 'என்கிற அதிமுக தலைவர்களின் கருத்துக்கு பாஜகவும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையாம்.
எடப்பாடி கே.பழனிச்சாமி பேட்டி
இதனை தொடர்ந்து எடப்பாடி கே.பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ விவகாரம் குறித்து அதிர்ச்சியடைந்தேன்.
நிதி அமைச்சர் பேசிய ஆடியோ விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுசென்றோம். ஆடியோ விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தவேண்டும் என்று அமித்ஷாவிடம் வலியுறுத்தியுள்ளோம். அதிமுகவிற்கும், அன்னாமலைக்கும் எந்த தகராறும் இல்லை. அதிமுக-பாஜக இடையே பிரிவினையை உண்டாக்க சிலர் முயற்சிக்கின்றனர்.
அந்தந்த கட்சிகள் அவரவர்களின் கொள்கையின் அடிப்படையில் செயல்படும். ஒற்றுமையாக செயல்பட்டு எங்கள் கூட்டணியை வெற்றிபெறச்செய்வோம்.
துரோகம் செய்தவர்களுக்கு அதிமுகவில் இடம் இல்லை. துரோகம் செய்தவர்களை தவிர்த்து மற்றவர்கள் வந்தால் கட்சியில் சேர்ப்போம்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுத்தது. இந்த வழக்கில் குற்றவாளிகளை கைதுசெய்தது அதிமுக அரசு. கொடநாடு வழக்கில் கைதானவர்களுக்கு திமுகவை சேர்ந்தவர்கள் ஜாமீன் எடுத்தனர்.
அதிமுக விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எங்களுக்கு முழுமையாக தீர்ப்பு வழங்கிவிட்டது. நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கிவிட்டது. அதிமுக எங்கள் பக்கம் தான் உள்ளது.
அதிமுக ஆட்சியில் விடப்பட்ட டெண்டரில் முறைகேடுகள் நடைபெறவில்லை. டெண்டர் முறைகேடு நடைபெற்றதாக சிஏஜி அறிக்கை கூறவில்லை.
கடந்த அதிமுக ஆட்சி 4 ஆண்டுகள் சிறப்பாக நடைபெற்றதாக செல்லும் இடங்களில் மக்கள் கூறுகின்றனர். ஆனால் திமுகவின் இந்த ஆட்சி எப்போது போகும் என மக்கள் கூறுகின்றனர். மேலும், திமுகவின் பி டீமாக ஓபிஎஸ் செயல்படுகிறார் என்று பேசினார்.