ஒரு கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் பேருக்கு மாதம் ரூ.1000/- முதல்வர் தொடங்கிவைத்தார்!

ம.பா.கெஜராஜ்,
தமிழ்நாட்டில் ஒரு கோடி பெண்களுக்கு தலா ரூ.1,000 வழங்கும் திட்டத்தை காஞ்சீபுரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
அப்போது சிவதாஸ் மீனா ஐஏஎஸ் தலைமைச் செயலாளர் அவர்களும் மாவட்ட ஆட்சியர் அவர்களும் சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் அன்பரசன் உள்ளிட்ட பங்கேற்றனர்.
முன்னதாக காலையில் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் நினைவு இல்லத்தில் அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்த முதலமைச்சர் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி அதிமுக மற்றும் தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பல்வேறு சலுகைகளை ஆட்சிக்கு வந்தால் கொடுப்போம் என்று வாக்குறுதி கொடுத்தன.
இந்நிலையில் திமுகவின் வாக்குறுதி அட்டவணையில் கடைசி பக்கத்தில், 'தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவோம்' என்று அறிவிக்கப்பட்டது. அந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைத்த நிலையில், பல்வேறு அறிவிப்புகள் நடைமுறைக்கு வந்தாலும், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் அந்த பட்டியலில் இடம்பெறாமலேயே இருந்து வந்தது.
அப்படியிருக்க, தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மேற்படி திட்டத்துக்காக பெண்கள் விண்ணப்பிக்கும் முகாமை கடந்த ஜூலை மாதம் 24-ந்தேதி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் முதலமைமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்காக தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்து 925 முகாம்கள் நடத்தப்பட்டன. இந்தப் பணியில், 68 ஆயிரத்து 190 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
அப்படியிருக்க¢ கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்காக விரிவான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டது. இந்த திட்டத்தில் சேர ஒரு கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்தனர். இதில், தகுதி இல்லாத சுமார் 56 லட்சத்து 50 ஆயிரம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதியாக, தகுதிவாய்ந்த ஒரு கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், அண்ணா பிறந்த காஞ்சீபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற விழாவில், ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைமைச்சர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார்.
பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைக்கிறார்கள். முன்கூட்டியே வரவு வைக்கப்பட்ட ரூ.1,000 தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளின் வங்கிக்கணக்குகளுக்கு ஏற்கனவே ரூ.1 அனுப்பி சோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று முதலே பலரது வங்கிக்கணக்குகளில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது.
மேலும், நிராகரிக்கப்பட்ட மனுதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆவண சரிபார்ப்பில் தகுதியான பயனாளியாக இருந்தால், அவர்களும் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். ஏற்கனவே, 6 லட்சத்து 55 ஆயிரம் பயனாளிகள் அதிகரித்துள்ள நிலையில், அது மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. அதைப் பொறுத்து அரசும் கூடுதல் நிதியை ஒதுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.