சூடேறும் தமிழக அரசியல்! ஆளுநரையும் மத்திய அமைச்சரையும் உதயநிதி இப்படித்தான் விளாசினார்!

சூடேறும் தமிழக அரசியல்! ஆளுநரையும் மத்திய அமைச்சரையும் உதயநிதி இப்படித்தான் விளாசினார்!

 ம.பா.கெஜராஜ்,

  மத்திய அமைச்சர் எல்.முருகனிடம் நீட் தேர்வு தற்கொலை குறித்து நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, "மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அந்தக் காலம் முதலாகவே வாடிக்கையான ஒன்றுதான்" என பதிலளித்தார். மேலும், மாணவர்களின் தற்கொலைகளை நீட் தேர்வுடன் தொடர்புபடுத்தி அரசியலாக்கக் கூடாது எனவும் அவர் கூறினார்.

   மத்திய அமைச்சர் எல்.முருகன் இவ்வாறு கூறிய நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஆவேசமாக பேசினார். அவர் கூறுகையில், "பாஜக தலைவர் ஒருத்தர் சொல்றாரு. அவர் பெயர்சொல்ல விரும்பல. பல ஆண்டுகளாக பொதுத்தேர்வு ரிசல்ட் வரும் போது இதுபோல மாணவர்கள் தற்கெ?லை செய்வது சாதாரண விஷயம் தானே என கூலா சொல்லிருக்காரு. நான் கேக்குறேன்.. இப்போ செத்துப்போன மாணவர்கள் எல்லாம் பொதுத்தேர்வு எழுதுன மாணவர்களா?

  அங்க ஒரு பொணு செத்து போச்சே அனிதா.. அந்தப் பொணு வாங்குன மார்க் தெரியுமா உங்களுக்கு? 1200-க்கு 1176. இவர்கள் எல்லாம் தற்கொலை செய்து கொண்டது நீட் தேர்வால தான். நான் தெரியாமல்தான் கேக்குறேன். உங்க வீட்டுல ஒரு குழந்தை இப்படி தற்கொலை செஞ்சா இப்படிதான் பேசுவீங்களா? இன்னொன்றும் சொல்றாரு. நீட் தேர்வுக்கு எதிராக இந்தப் போராட்டமே தேவையில்லையாம். நான் சொல்றேன். தமிழ்நாட்டுக்கு பாஜக என்ற கட்சியே தேவையற்றது. இதுதொடர்ந்து கொண்டே போனால் தமிழ்நாட்டில் அதிமுகவையும், பாஜகவையும் மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்" என உதயநிதி கூறினார்.

 தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை கடுமையாக விமர்சித்தார். "நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டேன்னு ஆளுநர் பேசுறாரு. நீங்க யாரு இதை சொல்றதுக்கு? நீங்களே போஸ்ட்மேன் வேலையை பாக்குறீங்க. ரொம்ப திமிரா பேசுறாரு ஆளுநர். அவர் ஆளுநர் ரவி அல்ல. ஆர்எஸ்எஸ் ரவி. ஆளுநருக்கு நான் சவால் விடுக்கிறேன். தமிழ்நாட்டில் ஏதாவது தொகுதியில நின்னு உங்களால் ஜெயிக்க முடியுமா? மக்கள் செருப்பால அடிப்பாங்க" என உதயநிதி பேசினார்.

    இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

    முதல்வரின் மகனாக இருக்கக்கூடிய உதயநிதி தான் இப்படி பேசி இருக்கிறார். வெட்கக்கேடான விஷயம் தமிழகத்தில் நடந்திருக்கிறது.

  இப்படித்தான் அநாகரீகமாக, அருவருப்பாக, கீழ்த்தரமாக ஆளுநரை பேசுவீர்களா..? தேர்தலில் தோல்வி அடைவது என்பது மக்கள் செருப்பால் அடிப்பதற்கு சமமா? அப்படியென்றால், 1977, 1980, 1984, 1991, 2001, 2011, 2014, 2016 என பல முறை தேர்தலில் தோற்றிருக்கிறது திமுக. அப்படியென்றால், இத்தனை தடவை திமுகவினரை மக்கள் செருப்பால் அடித்தார்கள் என அர்த்தமா?

 ஒரு அமைச்சர், அதிலும் ஒரு முதலமைச்சரின் மகன் இப்படி பொறுப்பில்லாமல், அராஜகமாக பேசுவது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது உள்நோக்கத்துடன் பேசப்பட்ட ஒன்று.

 தேர்தலில் தோற்றால் மக்கள் செருப்பால் அடித்ததற்கு சமம் என்றால் உதயநிதி ஸ்டாலின் அவர்களே, உங்கள் தந்தை கூட தேர்தலில் நின்று தோற்றவர்தான். உங்கள் அளவுக்கு நான் தரம்தாழ்ந்து பேச மாட்டேன். ஆனால் இதுபோன்ற பேச்சுகள் மக்களை தூண்டிவிடும் பேச்சுகள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் செயலை நீங்கள் செய்து கொடிருக்கிறீர்கள். உடனடியாக உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும். உதயநிதியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

   முன்னதாக உண்ணாவிரத அரங்கில், மாணவி அனிதாவின் (நீர் தேர்வால் உயிரிழந்தவர்) காணொளி ஒளிபரப்பப்பட்டது, அதை பார்த்து உதயந்தி கண்கலங்கினார்.