ராதிகா ஷூட்டிங் வந்திருக்கிறார்! தேர்தல் முடிந்ததும் பேக்கப் ஆகிவிடுவார்! முன்னாள் அமைச்சர் நக்கல்!

உ.சசிகுமார்,
ராதிகா விருது நகரில் ஷூட்டிங்குக்காக வந்திருக்கிறார், தேர்தல் முடிந்ததும் அவர் பேக்கப் ஆகிவிடுவார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நக்கல் அடித்திருக்கிறார்.
விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் வாக்கு சேகரித்தார்.
திருமங்கலம் மறவன்குளம், காங்கேயநத்தம் ஆகிய கிராமங்களில் அவர் பேசியதாவது:
இந்த தொகுதியில் விஜய பிரபாகரனை எதிர்த்து பாஜ சார்பில் ராதிகா போட்டியிடுகிறார். அவர் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் 15 நாள் கால்ஷீட் கொடுத்து ஷூட்டிங்கிற்கு வந்துள்ளார். அவருக்கு வசனங்கள் எழுதி கொடுப்பார்கள். ஷாட் என்றவுடன் அப்படியே பேசி நடித்து காட்டுவார். கட் என்றவுடன் நிறுத்தி விடுவார்.
தேர்தல் முடிந்தவுடன் உடனே பேக்கப் செய்து சென்னைக்கு கிளம்பி சென்றுவிடுவார். நீங்கள் சென்னைக்கு சென்று அவரது வீட்டின் கதவை தட்டி நான் மறவன்குளத்தில் இருந்து வருகிறேன், காங்கேயநத்தத்திலிருந்து வருகிறேன் என்றால் அது எங்குள்ளது சிங்கப்பூரிலா என கேட்பார். அவருக்கு வடக்கு எது, தெற்கு எது என்பது தெரியாது என்று கிண்டலடித்து பேசினார்.