ராஜபாளையத்தில் பிரதம மந்திரி பயிர்காப்பீட்டு திட்ட விளக்கம்!

ராஜபாளையத்தில் பிரதம மந்திரி பயிர்காப்பீட்டு திட்ட விளக்கம்!

 கே.ஏ.ஜெகதீஸ்வரி,

  மின் சிக்கனம், மின் திறன் மற்றும் மின் பாதுகாப்பு குறித்து ராஜபாளையத்தில் நடந்த விழிப்புணர்வு பயிற்சி முகாமில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

  விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் தென்காசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மின் சிக்கனம், மின் திறன் மற்றும் மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம் விருதுநகர் மின்பகிர்மான வட்டம் மற்றும் மத்திய திறனூக்க செயலகம் சார்பில் நடந்த இந்த முகாமில் ராஜபாளையம் மற்றும் வெம்பக் கோட்டை வட்டத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

  இவர்களுக்கு மின்சார வாரிய துறை அதிகாரிகள், மின் மேலாண்மை, சூரிய மின்சாரம், மின்சார சிக்கனம், மின் பாதுகாப்பு விழிப்புணர்வு, மின் மோட்டார் இறைப்பான் பராமரிப்பு, சோலார் மின் திட்டத்தில் உள்ள மானியங்கள், அரசிடம் இருந்து மானியத்தை பெறும் வழி முறைகள் குறித்து அறிவுரை வழங்கினர்.

   இக் கூட்டத்தில் கலந்து கொண்ட வேளாண்மை துறை அதிகாரிகள், பிரதம மந்திரி பயிர்காப்பீட்டு திட்டங்கள், விவசாயிகளுக்கான காப்பீடு திட்டங்கள், காப்பீடு செய்யும் முறை, காப்பீட்டுக்கான கால அவகாசம், அரசு மானியம், காப்பீடு செய்வதற்கான தகுதி மற்றும் கால்நடை பராமரிப்பு குறித்து விளக்கம் அளித்தனர்.

 மேலும் திட்டங்கள் மற்றும் அதன் பயன்கள் குறித்து புரொஜக்டர் மூலம் செயல் முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.