ஊராட்சி மன்ற தலைவர் டூ முதல்வர் பதவி! ரேவந்த் ரெட்டியின் வளர்ச்சி!! டெபாசிட் இழந்த பவன் கல்யாண்!

ஊராட்சி மன்ற தலைவர் டூ முதல்வர் பதவி! ரேவந்த் ரெட்டியின் வளர்ச்சி!! டெபாசிட் இழந்த பவன் கல்யாண்!

உ.சசிகுமார்,

 தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலில், கோடங்கல் மற்றும் காமாரெட்டி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட ரேவந்த் ரெட்டி கோடங்கல் தொகுதியில் வெற்றி பெற்று, இன்று தெலங்கானா மாநில முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

 வளர்ச்சி

 ரேவந்த் ரெட்டிக்கு தற்போது 54 வயதாகிறது. அவர் தெலங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டம், கொண்டாரெட்டி பல்லி எனும் குக்கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் இவருக்கு கீதா என்கிற மனைவியும் நைமிஷா எனும் மகளும் உள்ளனர். இவர், 2006-ம் ஆண்டில் மிட்ஜல் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 2007-ம் ஆண்டு, ஒருங்கிணைந்த ஆந்திராவில் உள்ள மகபூப்நகர் மாவட்டத்தில் இருந்து சுயேச்சை மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 அதன் பின்னர், சந்திரபாபு நாயுடு இவரை தெலுங்கு தேசம் கட்சியில் இணைத்துக்கொண்டு, 2009-ல் கோடங்கல் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளாராக போட்டியிட வைத்தார். அப்போது ரேவந்த் ரெட்டி காங்கிரஸ் வேட்பாளரான கோவர் தன ரெட்டியை தோற்கடித்து முதன்முறையாக சட்டப்பேரவை உறுப்பினரானார்.

 அதன்பின்னர், 2014-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் ரேவந்த் ரெட்டி வெற்றி பெற்றார். ஆந்திர மாநிலம் பிரிந்த நிலையில், தெலங்கானா தெலுங்கு தேச கட்சியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். பின்னர், 2017-ல் தெலுங்கு தேசம் கட்சிக்கு டாடா காட்டிவிட்டு காங்கிரஸில் இணைந்தார். 2018-ல் காங்கிரஸ் கட்சியின் தெலங்கானா மாநில செயல்   தலைவரானார்.

  2018-ல் தெலங்கானாவில் நடந்த தேர்தலில் கோடங்கலில் நின்று தோல்வியை சந்தித்தார். 2019-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இவர், தெலங்கானா மாநிலம், மல்காஜ்கிரி தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து இவரின் வளர்ச்சியை நம்பி, 2021ம் ஆண்டு தெலங்கானா மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி தலைவராக கட்சி மேலிடம் நியமனம் செய்தது.

 அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக திகழ்ந்து தெலுங்கானா மாநிலத்தில் முதல் முதலாக காங்கிரஸை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றிருக்கிறார்.

 டெபாசிட் இழந்த பவன் கல்யாண்

தெலுங்கானாவில் போட்டியிட்ட பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி டெபாசிட் இழந்துள்ளது.

தெலுங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளாக சந்திரசேகர் ராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது நடந்த தேர்தலில் அதிர்ச்சிக்குரிய வகையில் காங்கிரஸின் அதிரடி வெற்றியால் பின்னடைவை சந்தித்துள்ளது சந்திரசேகர் ராவின் கட்சி. இருந்தாலும் எதிர்கட்சியாக தகுதி பெறுவதற்கான அளவு பி.ஆர்.எஸ் பல இடங்களில் வென்றுள்ளது.

 இருப்பினும் தெலுங்கானாவில் பாஜக பலத்த பின்னடைவை சந்தித்துள்ளது. பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் பல இடங்களில் டெபாசிட் இழந்துள்ளன. பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி இந்த தெலுங்கானா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தது. தெலுங்கானாவில் ஜன சேனா கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது.

 8 தொகுதிகளிலுமே ஜன சேனா கட்சி டெபாசிட் இழந்துள்ளது. ஆந்திராவின் ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் பவன் கல்யாணுக்கு இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அடுத்த ஆண்டு ஆந்திராவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் இந்த தோல்வி பிரதிபலிக்குமா என்ற விவாதங்களும் எழுந்துள்ளது.