குழந்தை திருமணத்தை தடுத்த அலுவலர்கள்!

கு.அசோக்,
இன்னும் இரண்டு நாட்களில் நடக்க இருந்த குழந்தை திருமணத்தை சமூக நலன் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த அனந்தலை கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு வருகின்ற இரண்டு நாட்களில் திருத்தணி பகுதியில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.
இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அனந்தலை கிராமத்திற்கு காவல்துறை மற்றும் வருவாய் துறையினருடன் நேரில் சென்ற குழந்தைகள் நல அலுவலர் மலர் விழி அங்கு தீவிர விசாரணை மேற்கொண்டார்.
அப்போது அவர்களுக்கு கிடைத்த தகவல் உறுதிபடுத்தப்பட்டது. பின்னர் பெற்றோர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினார்கள்.
இதனையடுத்து சிறுமியை மீட்ட அதிகாரிகள் அவரை வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டத்தை பொறுத்தவரை குழந்தை திருமணம் குறித்து போதிய விழிப்புணர்வு பொதுமக்களிடையே இல்லாத காரணத்தினால் இது போன்ற குழந்தை திருமண நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது என பொதுமக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.
எனவே இதன் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாகவே தெரிவிக்கின்றனர்.