காதல் வீரம் கல்வி நம்முடைய அழகாக மலர்ந்திருந்தது! திருப்பத்தூர் ஆட்சியர் பேச்சு!ஊடகவியலாளர் கார்த்திக் செல்வம் பங்கேற்பு!!

ம.பா.கெஜராஜ்,
காதலும் வீரமும் கல்வியும் நம்முடைய அழகாக மலர்ந்திருந்தது என்று தமிழ் குறித்து திருப்பத்தூர் ஆட்சியர் பேசினார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள இஸ்லாமிய ஆண்கள் கல்லூரியில் 'மாபெரும் தமிழ்க் கனவு" சொற்பொழிவு நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்.இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். இதில் ஊடகவியலாளர் திரு. கார்த்திக் செல்வம் பங்கேற்றார்.
இது பற்றின விவரம் வருமாறு,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க தமிழ் இணைய கல்விக்கழகமும் மற்றும் மாவட்ட நிர்வாகமும் ஒன்றிணைந்து மாபெரும் தமிழ் கனவு நிகழ்வினை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் 100க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பல்வேறு தலைப்புகளின் கீழ் ஒரு லட்சம் மாணவர்கள் பங்கேற்புடன் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் 100வது நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொண்டு, இது போன்ற நிகழ்ச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இஸ்லாமிய ஆண்கள் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை உலகின் செலுத்தோங்கிய பண்பாடுகளில் முதன்மையான தமிழ் பண்பாட்டின் பெருமைகளையும் வளமையையும், அது எதிர்கொண்ட சவால்களையும், சமூகநீதி, பெண்கள் மேம்பாடு, தொல்லியல் ஆய்வுகள், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, கல்வி புரட்சி, அரசின் திட்டங்கள், அவற்றை செயல்படுத்தும் முறைகள் முதலிய தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு மாபெரும் தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிகளின் வாயிலாக இளைய தலைமுறைக்கு எடுத்துரைக்கும் வகையில் இம்மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடத்தப்படுகின்றன. இந்நிகழ்ச்சியில் முன்னதாக மாணவ, மாணவியர்களுக்கும் பயனடையும் வகையில் கையேடுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
மறந்து போன அல்லது மறைக்கப்பட்ட தமிழர்களுடைய வரலாறையும் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் குறிப்பாக இளைஞர்கள் அறிந்திடும் வகையில் நினைவு படுத்துகின்ற நிகழ்வாக தான் இந்த மாபெரும் தமிழ் கனவு தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வருகிறது.
கணியன் பூங்குன்றனார் புறநானூற்றில் சொன்னவாறு யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற மிகச்சிறந்த செம்மாந்த தத்துவத்தை உலகில் எந்த ஒரு மொழியினரும் கொண்டிருக்கவே இல்லை. தன்னாடு, தன்வீடு, தன்மக்கள் என்று சொல்லப்பட்ட ஒவ்வொரு சமுதாயத்திலும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற மிகச் சிறந்த ஒரு தத்துவத்தை உலகத்தில் ஓங்கி பிடித்த தமிழ் குடி இன்றைய தினம் தமது மரபுகளை மறந்து கொண்டிருக்கிறது, அதை நினைவு படுத்துவதற்காக தான் இந்த மாபெரும் தமிழ் கனவு என்ற தலைப்பில்அறிவுறுத்தப்பட்டு வருகிறோம்.
அத்தகைய ஒரு தமிழ் குடி இன்றைய தினம் எவ்வாறு இருக்கின்றது. ஏன் எதற்கு எவ்வாறு என்று கேட்கிறோமோ, அரசனையே நிற்க வைத்து கேள்வி கேட்ட சமூகம், அரசருக்கே பெண்பாற் புலவர்கள் அறிவுரை வழங்கிய சமூகம், என்னும் எழுத்தும் சாதாரண சாமானிய மக்களிடையே பரவி இருந்த சமூகம்.
நமது சமூகம் கல்வி எந்த அளவிற்கு அக்காலட்டங்களில் சாமானிய மனிதரிடம் நிரம்பி இருக்கின்றது என்று அகழ்வாய்வில் அறிவியல் பூர்வமாக தெரிகிறது. காதலும் வீரமும் கல்வியும் நம்முடைய அழகாக மலர்ந்திருந்தது அதை எல்லாம் மறந்து போயிருக்கின்றோம் என்பதை இம்மாபெரும் தமிழ் கனவு நிகழ்வினில் மூலமாக அறிந்து கொள்வதாகவும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்து.
தொடர்ந்து மூத்த ஊடக ஊடகவியலாளர் திரு. கார்த்திக் செல்வம் மாபெரும் தமிழ் கனவு சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, முன்னதாக வழங்கப்பட்ட தமிழ் பெருமிதம் குறித்த குறிப்பேடுகள், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி குறிப்பேடுகளை தவறாமல் படித்திடவும், குறிப்பேடுகளில் பல்வேறு தலைப்புகளின் கீழ் தெரிவித்துள்ள தகவலினை எடுத்துரைத்தார்.
தமிழர்களின் பண்டைய நாகரிகங்கள், கலாச்சாரம் பற்றியும் எடுத்துரைத்து இறுதியாக தமிழ் பெருமிதம் குறித்த தலைப்பின் கீழ் பேசிய மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் கருத்துரை விவாதத்துடன் பங்கேற்ற மாணவ, மாணவர்களுக்கும் நினைவு பரிசையுடன் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இ.வளர்மதி, இஸ்லாமிய கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள், மற்றும் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர்.