ஆடுகளை கடித்துக் கொன்ற சிறுத்தை! ஒருவேளை அதுதான் இதுவோ?!

கு.அசோக்,
விவசாய நிலத்திற்குள் புகுந்து பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 8 ஆடுகளை கடித்துக் கொன்ற சிறுத்தை. வனத்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை. வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து சுற்றித்திரியும் சிறுத்தையால் பொதுமக்கள் அச்சம்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பழைய வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் அதே பகுதியில் ஒருங்கிணைந்த பண்ணை நடத்தி வரும் நிலையில், இவரது பண்ணையில் புகுந்த சிறுத்தை, பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆடுகளை கடித்து குதறியுள்ளது.
இதில் 8 ஆடுகள் குடல் சரிந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனை கண்ட ராஜேஷ் இதுகுறித்து வாணியம்பாடி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் காலடித்தடத்தை வைத்து விசாரணை மேற்க்கொண்டனர்.
ஆகவே வாணியம்பாடியில் நிலத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆடுகளை சிறுத்தை கடித்து குதறி கொன்ற சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பு:- கடந்த மாதம் திருப்பத்தூர் நகர் பகுதியில் புகுந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் வாணியம்பாடி அருகே உள்ள தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியான மாதகடப்பா பகுதியில் விட்டனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னபள்ளிகுப்பம் பகுதியில் சிறுத்தையை கண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.
ஒருவேளை அதுதான் இதுவோ?