தூர்வாரியும் கடைக்கோடிக்கு வந்து சேராத காவிரி நீர்! அதிகாரிகளே ப்ளீஸ்...!

ம.முருகன்,
கடந்த மாதம் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டாலும் கல்லணை கால்வாய் வழியாக வரக்கூடிய தண்ணீர் இன்னும் கடைமடைக்கு வந்து சேரவில்லை.
தஞ்சாவூர் மாவட்டம், செல்லம்பட்டி அருகில் பிரியும் உளவயல் வாய்க்கால் சுமார் 18 கிலோமீட்டர் சுற்றி புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் நுழைகிறது. அதாவது பத்துதாக்கு, ராஜாளிவிடுதி, செங்கமேடு, மணமேடை திருவோணம், சிவவிடுதி காடுவெட்டிவிடுதி,குளந்திரான்பட்டு, இராங்கியன்விடுதி கிராமங்களில் சுமார் 8278 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு இதுதான் பாசன நீர்.
எந்த வருடம் தண்ணீர் திறந்து விட்டாலும் திருவோணத்தை தாண்டி தண்ணீர் கடைமடைக்கு வந்து சேர்வதில்லை. மிகுந்த போராட்டங்களை நடத்தியே தண்ணீரை குளம் குட்டைகளுக்கு நிரப்ப வேண்டியுள்ளது. மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து இத்தனை நாட்கள் ஆகிவிட்டது இந்த கிளை வாய்க்கால்களை நம்பியுள்ள எந்த நீர்நிலை குளங்களும் நிரம்ப வில்லை.
கடந்த ஆண்டு முதல் உளவயல் வாய்க்கால் மராமத்து பணி செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பணி முழுமையாக முடிந்தால் தண்ணீர் கடை கோடிக்கு வந்து விடும் என அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
இப்போது அந்த பணி எந்தளவில் இருக்கிறது என்று அதிகாரிகளிடத்தில் கேட்டால் கப் சிப்பென்று ஆகிவிடுகிறார்கள்.
ஆகவே கல்லணை கால்வாய் கோட்ட பொறியாளர்கள் மற்றும் இரண்டு மாவட்ட ஆட்சியர்களும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கருத்தாயுதக்குழு ஒருங்கிணைப்பாளர் துரைகுணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.