கமலஹாசன் கட்சி காங்கிரஸிடம் இணைப்பா! “ஹேக்கர்”களால் திகில்!

ஜி.சாந்தகுமார்,
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு, கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், காங்கிரஸ் கட்சியுடன் மக்கள் நீதி மய்யம் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. அதில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் மற்றும் மக்கள் நீதி மய்யம் இணைப்பு நிகழ்ச்சி டெல்லியில் காந்தியின் நினைவு தினமான வருகிற 30-ந்தேதியன்று நடைபெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும், பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு பலம் வாய்ந்த கட்சியாக உருவெடுப்பதற்காக மக்கள் நீதி மய்யத்தை தொடர்ந்து, மற்ற கட்சிகளும் தங்களை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் அதில் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் இணையதள பக்கத்தில் வெளியான இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது.
இது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
விசாரித்த போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் இணையதளத்தை மர்ம ஆசாமிகள் 'ஹேக்' (முடக்கம்) செய்து, தங்கள் கட்டுப்பாட்டில் வைத்தது தெரியவந்தது.
பின்னர், சில மணி நேரத்தில் மர்ம ஆசாமிகளிடம் இருந்து இணையதளத்தை மக்கள் நீதி மய்யத்தினர் மீட்டு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
கட்சியின் இணையதள பக்கத்தில் இருந்த காங்கிரஸ் கட்சி உடனான இணைப்பு செய்தி தொடர்பான தகவல் உடனடியாக அகற்றப்பட்டது.