செக்ஸ் புகாரில் சிக்கிய கலாசேத்ரா ஆசிரியர்கள்! மகளிர் ஆணைய தலைவர் அதிரடி விசாரணை!

ஜி.சாந்தகுமார்,
சென்னை திருவான்மியூரில் கலாசேத்ரா அறக்கட்டளை சார்பில் ருக்மணிதேவி கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பரதநாட்டியம் உள்ளிட்ட கலைகள் பயிற்றுவிக்கப்படுகிறது. மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி முறையில் செயல்படும் இந்த கலாசேத்திரா கல்லூரி பேராசிரியர்கள் 4 பேர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறி கல்லூரி மாணவிகள் 2 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், பாலியல் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
இந்த கல்லூரியில் பயின்று வந்த மாணவிகள் சிலர், பேராசிரியர் ஒருவர் தங்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாக அறக்கட்டளை இயக்குநர் ரேவதி ராமசந்திரனிடம் புகார் அளித்தும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று சமூக வலைத்தளங்களில் ஒன்றாக பதிவு செய்தனர்.
இதனால் மாணவிகளின் குற்றச்சாட்டுக்கு தேசிய மகளிர் ஆணையம் தனி கவனம் செலுத்தியது.
இதுகுறித்து உடனே தேசிய மகளிர் ஆணையம் கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு விளக்கம் கேட்டிருந்தது. அதன்படி கலாசேத்ரா அறக்கட்டளை இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன், கல்லூரி முதல்வர் தலைமையில் விசாரணை குழு அமைத்தார். அதன்படி விசாரணை குழு கல்லூரி வளாகத்தில் மாணவிகளை ஒன்றாக அமரவைத்து பாலியல் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தினர்.
பொது வெளியில் விசாரணை நடத்தியதால் மாணவிகள் யாரும் பாலியல் தொந்தரவு குறித்து புகார் அளிக்க முன் வரவில்லை. இதையடுத்து விசாரணை குழு தங்களது அறிக்கையை கலாசேத்ரா இயக்குநரிடம் அளித்தனர்.
அதன் பிறகு, கலாசேத்ரா மிகவும் பழமையான கல்வி நிறுவனம் என்பதால் அதன் பெயரை கெடுக்கும் வகையில் சிலர் திட்டமிட்டு சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரப்புவதாக குற்றம்சாட்டி இருந்தார். அதனை தொடர்ந்தும் மாணவிகள் சமூக வலைத்தளத்தில் மீண்டும் பாலியல் தொடர்பாக குற்றம்சாட்டி வெளியே சொன்னால் மிரட்டுவதாக பதிவு செய்து இருந்தனர்.
அதைதொடர்ந்து மீண்டும் தேசிய மகளிர் ஆணையர் மாணவிகளின் குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்த தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு கடிதம் மூலம் தெரிவித்தனர். பிறகு மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த வாரம் கலாசேத்ரா அறக்கட்டளை இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் டிஜிபியை நேரில் சந்தித்து தங்களது விசாரணை அறிக்கையை அளித்து விளக்கம் அளித்தார்.
அப்படியிருக்க, வெளிநாட்டில் உள்ள முன்னாள் மாணவிகள் பலர் தொடர்ந்து கலாஷேத்ராவின் பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்து வந்ததால், தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா நேற்று முன்தினம் கலாசேத்ரா கல்லூரிக்கு வந்து மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். அப்போது, மாணவிகள் பேராசிரியர் ஹரி பத்மன், உதவி நடனஆசிரியர்களான சஞ்சித் லால், சாய் கிருஷ்ணா, ஸ்ரீநாத் ஆகியோர் 'சிறப்பு நடன பயிற்சி' என்று அடிக்கடி வாட்ஸ் அப் மற்றும் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு அழைக்கின்றனர். பிறகு சிறப்பு நடன பயிற்சியின் போது, எங்கள் உடல் பாகங்களை தொட்டும், பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாகவும் குற்றம்சாட்டினர்.
பிறகு தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா மாணவிகளின் குற்றச்சாட்டு குறித்து கலாசேத்ரா அறக்கட்டளை இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் மற்றும் ருக்மணி தேவி நுண் கலை கல்லூரி முதல்வரிடம் தனியாக விசாரணை நடத்தினர். அப்போது, இருவரும், கல்லூரியில் குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் உட்பட 4 பேரை காப்பாற்றும் வகையில் விளக்கம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதே நேரம், தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக கூறி திடீரென கொதித்து எழுந்து மாணவிகள் கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
அப்போது, பாலியல் தொந்தரவு செய்து வரும் 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என கையில் பாதகைகளுடன் கல்லூரி மற்றும் 4 பேருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். கலாசேத்ரா இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாணவிகள் எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என கூறினர். இதனால் ரேவதி ராமச்சந்திரனை அங்கிருந்து வெளியே செல்ல முயன்றார். ஆனால் மாணவிகள் அவரை வெளியே விடாமல் சூழ்ந்து கொண்டனர். இதனால் அவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். பிறகு ரேவதி ராமச்சந்திரனை உடன் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
நிலைமை கைமீறி போனதால் கலாசேத்ரா இயக்குநர் கல்லூரியை வரும் 6ம் தேதி வரை விடுமுறை அளிப்பதாக அவசர சுற்றறிக்கை வெளியிட்டனர். ஆனால் சுற்றறிக்கையை பொருப்படுத்தாமல் மாணவிகள் நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என உறுதியாக கூறிவிட்டனர்.
அதைதொடர்ந்து மாணவிகளின் போராட்டம் குறித்து தகவல் அறிந்த அவர்களின் பெற்றோர்கள் கல்லூரி முன்பு ஒன்று கூடினர். இதையடுத்து கல்லூரி முன்பு பதற்றம் நிலவியதை தொடர்ந்து உடனே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பின்னர் மாணவிகளின் உள்ளிருப்பு போராட்டம் விடிய விடிய இரண்டாவது நாளாக நேற்றும் நீடித்தது.
இதையடுத்து தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி, கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் மாணவிகளிடம் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் 100 பேர் 'கல்லூரியில் எங்களுக்கு முறையாக பாதுகாப்பு இல்லை. சிறப்பு பயிற்சி என்ற பெயரில் தங்களை தனித்தனியாக அழைத்து பேராசிரியர் உட்பட 4 பேர் தொந்தரவு செய்து வருவதாக எழுத்துப்பூர்வமாக புகார் கடிதத்தை வழங்கினர்.
பிறகு பேராசிரியர் ஹரி பத்மன், உதவி நடனஆசிரியர்களான சஞ்சித் லால், சாய் கிருஷ்ணா, ஸ்ரீநாத் ஆகியோரால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 12 மாணவிகளிடம் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி தனித்தனியாக விசாரணை நடத்தினார். அப்போது மாணவிகள் பலர், தங்களை சிறந்த நடன கலைஞராக உருவாக்கி மேடை ஏற்றுவதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், இதுகுறித்து வெளியே சொன்னால் கல்லூரியில் இருந்து நீக்கி விடுவதாக மிரட்டி வருவதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதை குமாரி எழுத்து வடிவில் பதிவு செய்து கொண்டார்.
பேராசிரியர் உட்பட 4 பேர் மூலம் தொடர்ந்து பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக முன்னாள் மாணவிகள் சிலர் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரியிடம் வீடியோ கால் மூலம் புகார் அளித்தனர். கல்லூரியில் இருந்து வெளியேறிய பிறகும், எங்களிடம் தவறாக நடந்து கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்து தற்போதும், எங்களை அழைத்து பாலியல் தொந்தரவு செய்து வருவதாக கண்ணீர் மல்க புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி முன்னறிவிப்பு இன்றி போராட்டம் நடத்தும் மாணவிகளிடம் விசாரணை நடத்த சென்றதால், கலாசேத்ரா கல்லூரி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இருப்பினும், போராட்டம் நடத்தும் மாணவிகளிடம் முழுமையாக விசாரணை நடத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். குமாரியின் வேண்டுகோளை ஏற்று 2 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் மாணவிகள் கலைந்து செல்வதாக உறுதி அளித்துள்ளனர். இருந்தாலும், கல்லூரி முன்பு பாதுகாப்புக்காக உதவி கமிஷனர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் கலாஷேத்ரா கல்லூரி வளாகத்தில் நேற்றும் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.
கலாசேத்ரா கல்லூரி பேராசிரியர் உட்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, போராட்டம் நடத்திய மாணவிகள் அனைவரும் இணைந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்று இ-மெயில் மூலம் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் கலாசேத்ரா மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் உண்மை என்றால் சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.