பாஜக வென்றால் எதிர்கட்சி ஆளும் மாநில முதல்வர்களுக்கு பிரச்சனை செய்வார்கள்! அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு!

ம.பா.கெஜராஜ்,
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில் வெளி வந்திருக்கிறார். அவருக்கு ஆம் ஆத்மி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஜூலை 2 அவர் சிறைக்கு திரும்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் இன்று மே-11 ஆம் தேதி காலை தனது மனைவி சுனிதா, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோருடன் அனுமார் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.
பின்னர் ஆம் ஆத்மி அலுவலகத்துக்கு வந்து தொண்டர்கள் மத்தியில் நீண்ட உரையாற்றினார்.
அப்போது அவா குறிப்பிடுகையில், "நான் சிறையிலிருந்து நேராக உங்களிடம் வருகிறேன். 50 நாட்களுக்குப் பிறகு உங்களுடன் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நானும், எனது மனைவியும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் அனுமார் கோவிலுக்குச் சென்றோம்.
அனுமாரின் ஆசீர்வாதம் நம் கட்சிக்கும் எனக்கும் இருக்கிறது. அவர் அருளால்தான் இன்று நான் உங்களிடையே இருக்கிறேன்" என்று கூறினார்.
"டெல்லியில் நாங்கள் ஆட்சி அமைத்த பிறகு, எனது அமைச்சர் ஒருவரை நானே பதவி நீக்கம் செய்து சிறைக்கு அனுப்பினேன். பஞ்சாபில் ஒரு அமைச்சரை சிறைக்கு அனுப்பினோம். ஆனால் திருடர்களையெல்லாம் உங்கள் கட்சியில் சேர்த்துக் கொண்டு என்னை சிறைக்கு அனுப்புகிறீர்கள். என்னை கைது செய்ததன் மூலம் கெஜ்ரிவாலை கைது செய்தால் யாரையும் கைது செய்வோம் என்று காட்ட நினைக்கிறீர்கள்.
75 ஆண்டு கால இந்திய வரலாற்றில் இந்த அளவுக்கு வேறு எந்தக் கட்சியும் துன்புறுத்தப்படவில்லை. ஊழலுக்கு எதிராக போராடுவதாக பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால் திருடர்கள் அனைவரும் அவரது கட்சியில் தான் உள்ளனர்.
ஊழல் செய்தவர்களை கட்சியில் சேர்த்துக் கொண்டு துணை முதல்வராகவும், அமைச்சராகவும் ஆக்கினார்கள். உண்மையில் ஊழலுக்கு எதிராக போராட வேண்டுமானால் என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்.
ஆம் ஆத்மி அமைச்சர்கள், ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன், மம்தா பானர்ஜியின் கட்சி அமைச்சர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாஜக மீண்டும் வெற்றி பெற்றால், மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ், பினராயி விஜயன், உத்தவ் தாக்கரே மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் சிறையில் வைப்பார்கள்.
எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சிவராஜ் சிங் சவுகான், வசுந்தரா ராஜே, எம்.எல்.கட்டார், ராமன் சிங் ஆகியோரின் அரசியல் முடிந்துவிட்டது. அடுத்தது யோகி ஆதித்யநாத். இந்த தேர்தலில் வெற்றி பெற்றால், இன்னும் 2 மாதங்களுக்குள் உத்தரபிரதேச முதல்வரை மாற்றிவிடுவார்கள்.
75 வயதில் பாஜகவில் ஓய்வு கொடுத்துவிடுவார்கள் என்றால் அமித்ஷா வை பிரதமராக்க மோடி வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்." என கெஜ்ரிவால் அவரது உரையில் குறிப்பிட்டு பேசினார்.