நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன்! த.வெ.க.கட்சித்தலைவர் விஜயை பின் பற்றும் நடிகர் விஷால்!

ம.பா.கெஜராஜ்,
த.வெ.க.கட்சித்தலைவர் விஜயை பின் பற்றுவதை நடிகர் விஷால் வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி தொடர்பாக நடிகர் விஷால் திருக்குறள் ஒன்றை சுட்டிக்காட்டி தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
கள்ளச்சாராயம் குடித்த அப்பாவி மக்கள்51 பேர் இந்த கள்ளச்சாராயத்துக்கு உயிரிழந்துவிட்ட நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்தும் அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். எஸ்.பி.சஸ்பெண்டு செய்யப்பட்டிருக்கிறார்.
எதிர்கட்சிகள் பொங்கி குரல் கொடுத்து வருகின்றன. அப்படியிருக்க இதுவரை பலருக்கு வாழ்த்துகளை மட்டுமே தெரிவித்து வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் முதன்முறையாக தமிழக அரசுக்கு இந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவித்ததுடன், கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களை பார்த்து விஜய் கண் கலங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியது.
இவற்றையெல்லாம் பார்த்த நடிகர் விஷால் தற்போதுலவரும் களத்தில் இறங்கி எக்ஸ் பக்கத்தில் அறிக்கையெல்லாம் வெளியிட்டிருக்கிறார்.
அதில்,"கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போவது பேரதிர்ச்சியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் விஷ சாராயத்திற்கு மக்கள் உயிரிழக்கும் நிகழ்வும், போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருவதும் தொடர் கதையாகவே உள்ளது.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சில அதிகாரிகளை மட்டும் இடமாற்றம் செய்து தமிழக அரசு முதற்கட்ட நடவடிக்கை எடுத்து இருந்தாலும், இந்த துயரமான நிகழ்விற்கு காரணமான ஒருவர் கூட விடுபடாத அளவுக்கு நீதியின் முன் அவர்களை நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
"கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல்" என்ற வள்ளுவனின் வாக்கின்படி, தமிழ்நாடு அரசு விஷ சாரயத்தை ஒழிக்கவும், அண்மைக்காலமாக தமிழகத்தில் புழங்கும் போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி, மதுபான கடைகளை படிப்படியாக குறைத்திட செயல் திட்டம் வகுக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அறிக்கை வாயிலாக தமிழக மக்களின் ஒருவனாக சமர்ப்பிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.