ஒப்புதல் தந்தால் மகிழ்ச்சி-இல்லையேல் அதிகாரத்தை பயன்படுத்துவோம்:- சுரங்கப்பாதை திட்டம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!

ஒப்புதல் தந்தால் மகிழ்ச்சி-இல்லையேல் அதிகாரத்தை பயன்படுத்துவோம்:- சுரங்கப்பாதை திட்டம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!

 ஜி.கே.சேகரன்.

   வேலூரில்   மற்ற நகரங்களில் உள்ளதை போல் பறக்கும் சாலை அமைக்க சாத்திய கூறுகள் உள்ளதா என ஆய்வு- வேலூர் விரிஞ்சிபுரம் மற்றும் மாதனூர் பாலாற்றின் குறுக்கே மேம்பாலங்களை அமைக்க திட்ட மதிப்பீடு தயாரித்து ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது - சி.எம்.சி மருத்துவமனை எதிரில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசியுள்ளோம் அவர்கள் அனுமதியளிக்கவில்லை என்றால் தமிழக அரசுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி நில எடுப்பு செய்து சுரங்கப்பாதை அமைப்போம் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வேலூரில் பேட்டி.

 வேலூர் மாவட்டம்,வேலூர் கோட்டை மைதானத்தில் வரும் 21 ஆம் தேதி தமிழக முதல்வர் வருகை தந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைந்த புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைக்கிறார்.

   பின்னர் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கவுள்ளார், இந்நிலையில் பந்தல் அமைக்கும் பணியினை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ,.வேலு மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார்,மாநகராட்சி ஆணையர் அசோக்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது பணிகளை வேகமாக முடிக்க அமைச்சர் அறிவுரையை வழங்கினார்

   பின்னர் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழக முதல்வர் இராணிப்பேட்டை வேலூர் திருப்பத்தூர் மாவட்டங்களில் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில்  ஆட்சியர் அலுவலகங்களை திறந்து வைக்கிறார்.

  வேலூரில் புதிய பேருந்து நிலையங்கள் திறப்பு ஆகிய விழாக்களும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடக்கிறது, அதற்காக பணிகள் நடைபெறுகிறது.

 மாதனூர் மற்றும் விரிஞ்சிபுரம் பாலாற்றின் குறுக்கே மேம்பாலங்கள் அமைக்கும் பணிக்கு திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது விரிஞ்சிபுரம் மேம்பாலத்திற்காக ரூ.30 கோடியும் மாதனூர் மேம்பாலத்திற்காக ரூ,28 கோடியும் திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது விரைவில் பணிகள் துவங்கும்.

   காங்கேயநல்லூர் சத்துவாச்சாரி தரைபாலங்களும் இந்த ஆண்டு விலைவாசி உயர்ந்துள்ளதால் விலை நிர்ணயம் செய்யப்பட்டு பணிகள் துவங்கும்.

  தமிழகத்தில் கோவை சென்னை மதுரை ஆகிய மாநகரங்களில் பறக்கும்சாலைகள் உள்ளதை போல் வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் நகரிலும் பறக்கும் சாலைகள் அமைக்கும் திட்டம் குறித்து சாத்திய கூறுகள் ஆய்வு செய்யபடுகிறது.

  வேலூர் புகழ் பெற்ற சி.எம்.சி மருத்துவமனையின் அருகில் சுரங்கப்பாதை ஒன்று அமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது அதற்காக சட்டமன்றத்திலும் கோரிக்கை வைத்து அதனை நிறைவேற்ற உறுதியளித்துள்ளோம்.

 அதன்படி சுரங்கப்பாதை அமைக்க சி.எம்.சி மருத்துவமனை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் அவர்கள் ஒப்புதல் தந்தால் மகிழ்ச்சியாக அமைப்போம் இல்லையென்றால் எங்களுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி நில எடுப்பு செய்து விரைவில் சுரங்கப்பாதை அமைப்போம் என்று சொன்னார்.